காயம் காரணமாக நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கிறிஸ் கெய்ல் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 2- 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லெவிஸ் 76 ரன்களும் பாவெல் 59 ரன்களும் எடுத்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய கிறிஸ் கெய்ல் வெறும் 22 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இதில் காயம் காரணமாக கெய்ல் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

‘நேற்றைய போட்டியில் காயம் காரணமாக அவர் பீல்டிங் செய்யவில்லை. அவர் மருத்துவ பரிசோதனைக்கு செல்ல இருக்கிறார். சென்றுவிட்டு வந்த பின் தான் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியவரும். அவருக்கு உடல் நிலையில் என்ன பிரச்னை என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் டாக்டர் இல்லை’ என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறினார்.