ஒன்னும் கவலப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்… கிறிஸ் லின் ஆர்வம்
கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் தனது கடமையை சரியாக செய்ய ஆவலுடன் காத்துள்ளதாக அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டன. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதத்தில் பலம் பொருந்திய அணியாக இந்த ஆண்டு களம் காண உள்ளது.
இதில் கிறிஸ் லின், ஸ்டார்க் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலரை கொல்கத்தா அணி தனது அணியில் எடுத்து கொண்டாலும், இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கழட்டி விடப்பட்டது ரசிகர்களிடையே பெரிய அதிர்சியை ஏற்படுத்தியது. மேலும் வரும் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்த போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் பேசியிருந்த கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜெக் காலிஸ், கிறிஸ் லின்னை கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிறிஸ் லின், கொல்கத்தா அணியின் கேப்டனாக தான் நியமிக்கப்பட்டால் அது தனக்கு கிடைத்த பெருமை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிறிஸ் லின் கூறியதாவது “கொல்கத்தா அணியின் கேப்டான நான் நியமிக்கப்பட்டால் அது எனக்கு கிடைத்த பெருமையாக உணர்வேன். ஒருவேளை நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில் எனது பொறுப்பை உணர்ந்து எனது கேப்டன் பொறுப்பை சரியாக செய்ய ஆவலுடன் காத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணியின் கேப்டனுக்கான போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா போன்ற இன்னும் சில வீரர்கள் உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.