இலங்கையில் கிரிக்கெட் வீரரின் தந்தை அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர், தனஞ்செய டி சில்வா. இவர் தந்தை ரஞ்சன் டி சில்வா. இவர் கவுன்சிலராக இருந்தார். இலங்கை தலைநகர் கொழும்பில் வசித்து வந்த ரஞ்சன், அடையாளம் தெரியாத நபரால் நேற்று இரவு சுடப்பட்டார். ரத்னமலானை பகுதியில் உள்ள ஞானேந்திரா சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அவரை அருகில் உள்ள கலுபோவ்லியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுவதற்காக இன்று அங்கு செல்கிறது. அந்த அணியில் இடம் பிடித்திருந்தார் தனஞ்செய டி சில்வா. இந்த சம்பவத்தை அடுத்து அங்கு செல்வதில் இருந்து விலகியுள்ளார். ரஞ்சனின் மறைவை அடுத்து ஏராளமான கிரிக்கெட் வீரர்களும் உறவினர்களும் அவரது உடலுக்கு நேற்று இரவு அஞ்சலி செலுத்தினர்.
கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”வீட்டிற்கு வெளியே நேற்றிரவு 8.30 அளவில் நானும் தந்தையும் இன்னும் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான் கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு நகர்ந்தேன். நான் அந்த இடத்தில் இருந்து சென்ற சில நிமிடங்களில் அங்குவந்த மர்ம நபர்கள் அப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டோம்.
”இந்த மாத முற்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பாதாள உலகக் குழுவினர் குறித்து போலீசாருக்கு முறையிட்டோம். இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாக தெரியும். இவர்கள் மோசமானவர்கள் என்பதால் யாரும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. ஆனால் நாம் இதனை செய்தோம். முறைப்பாடு செய்ய சென்றபோதுகூட இவர்கள் ஆபத்தானவர்கள் என போலீசார் எம்மை எச்சரித்தனர். இருந்தாலும் நாம் முறையிட்டோம். இதன் பின்னர் அந்தக் கும்பல் ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதலில் ஈடுபட்டது. இதன் பின்னரே நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.”
தந்தையைத் தான் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று கேள்வியெழுப்பினோம்.
”நானும் தந்தையும் தான் இவர்களுக்கு எதிராக செயற்பட்டோம். நான் தான் இவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். என்னை இலக்குவைத்தே இவர்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் சில நொடிகள் மாறிப்போக அப்பா அந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினார்” என்று அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன், சாவித்திர டி சில்வா தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநரக சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், அவரது தந்தை கே.ரஞ்சன் சில்வா (62) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது