இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பிய நோட்டீஸுக்கு, தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில், கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்சிங் ரூமில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லமுடன் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் பரவின. டிரின்பாகோ அணியின் ஜெர்ஸி அணிந்து அவர் இருந்ததால், இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டது.

இந்திய வீரர்கள், வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்கவில்லை. யுவராஜ் சிங்குக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அங்கு ஏன் சென்றார் என்பது சர்ச்சையானது. இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் அனுமதி இன்றி அங்கு சென்றதால், உங்கள் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்கப்பட்டிருந்தது.
Dinesh Karthik hanging out with Baz in the Knight Riders locker room, in their first CPL match. pic.twitter.com/YY1ZZbXfDm
— Mayur Bhai (@Uglybuoy) September 5, 2019
இந்நிலையில் பிசிசிஐ-யின் நோட்டீஸுக்கு தினேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார். அதில், ’கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலம்தான், டிரின்பாகோ அணிக்கும் பயிற்சியாளர். அவர் அழைப்பின் பேரிலேயே நான் அங்கு சென்றேன். கொல்கத்தா அணி பற்றி ஆலோசனை நடத்தலாம் என்றும் அது கேப்டனாக எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அழைத்ததால் சென்றேன்.

நான், அங்கு நடந்த எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடந்த 4 ஆம் தேதி நடந்த டிரின்பாகோ அணியின் முதல் போட்டி யை டிரெஸ்சிங் ரூமில் இருந்து பார்க்கலாம் என்று மெக்கலம் அழைத்ததால் அங்கு சென்று அவர்களின் ஜெர்ஸியை அணிந் தேன். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன் அனுமதி இல்லாமல் அங்கு சென்றது தவறுதான். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.