ஓட்டுமொத்த தொடரில் இருந்தும் விலகுகிறார் டூ பிளசிஸ்… தவிப்பில் தென் ஆப்ரிக்கா
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி.20 தொடரில் இருந்து தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் விலகியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு சதம் அடித்து கைகொடுத்த அந்த அணியின் கேப்டன் டூ பிளசிஸ், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள டி.20 போட்டிகள் என இந்திய அணிக்கு எதிரான ஒட்டுமொத்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா அணியின் ஆல் ரவுண்டரான பர்கான் பெஹர்தீன், எஞ்சியுள்ள போட்டிகளில் அணியில் இடம்பெற உள்ளார். ஆனால் எஞ்சியுள்ள போட்டிகள் தென் ஆப்ரிக்கா அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பு வரும் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே அதிரடி ஆட்டக்காரரான டி.வில்லியர்ஸும் காயம் காரணமாக முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது டூ பிளசிஸும் அணியில் இருந்து விலகுவது நிச்சயம் தென் ஆப்ரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது நிச்சயம்.
இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி 4ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.