தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சீரழித்துவிட்டார் என்று அப்துல் காதிர் குற்றச்சாட்டியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் தொடக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்ரேட் விகிதத்தில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் உமர் அக்மர், அகமது ஷேசாத் போன்ற வீரர்களை புறக்கணித்ததன் மூலம் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் காதிர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அப்துல் காதிர் கூறுகையில் ‘‘மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார். அவர் அகமது ஷேசாத், சமி அஸ்லாம், சல்மான் பட், உமர் அக்மல், சோஹைல் கான் ஆகிய இவர்களுடன் மேலும் பல வீரர்களை இவர் புறந்தள்ளிவிட்டார். இவர்களின் அனுபவம் மற்றும் ஆட்டத்திறனால் பாகிஸ்தான் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்க முடியும்.
இந்த வீரர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை பிரச்சனை இருந்தாலும் கூட, அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பேற்று வருங்காலத்தில் சிக்கலில் சிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உலகக்கோப்பை தொடருடன் மிக்கி ஆர்தரின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம் விலகினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் (பி.சி.பி.,) தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் இன்சமாம்–உல்–ஹக் 49, உள்ளார். இவரது பதவிக் காலம் வரும் 31ல் முடிவடைகிறது. இந்நிலையில் இவர், தனது ஒப்பந்தத்தை நீட்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் விலகுவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி, லீக் சுற்றோடு திரும்பியது.
இதுகுறித்து இன்சமாம் கூறுகையில், ‘‘மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து வருகிறேன். மேலும் எனது ஒப்பந்தத்தை நீட்டிக்க விருப்பம் இல்லை. இதுகுறித்து பி.சி.பி., தலைவர் மற்றும் இயக்குனரிடம் எனது முடிவை தெரிவித்துவிட்டேன். அடுத்து நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப், ‘டுவென்டி–20’ உலக கோப்பை (2020) மற்றும் உலக கோப்பை (2023) தொடர்களுக்கு முன், புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்வு செய்யும் பட்சத்தில், சிறந்த அணியை உருவாக்கலாம்,’’ என்றார்.