ரிஷப் பண்ட் தான் அனைத்து வகை போட்டிகளுக்கு ஏற்ற விக்கெட் கீப்பராக இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை சேர்க்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் விளையாடி வருகிறார். எனினும் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. தோனி பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். ஆகவே ரிஷப் பண்ட்டும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவேண்டும் என்ற நெருக்கடி எழுந்துள்ளது.
இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஆதாரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தின் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் விளையாட, விளையாட தான் கற்றுக் கொள்வார். இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இளம் வீரர்கள் நிறையே பேர் உள்ளனர். அவர்களுக்கு கேப்டனின் ஆதரவு மிகவும் அவசியம்.
அந்தவகையில் ரிஷப் பண்ட்டிற்கு தற்போது அதிக ஆதரவு தேவைப்படுகிறது. ரிஷப் பண்ட் இந்திய அணியில் நுழையும் போது சிறப்பான ஃபார்மில் இருந்தார். என்னைப் பொருத்தவரை இவர்தான் இந்திய அணியின் அனைத்து வகை போட்டிகளுக்கும் பொருத்தமான விக்கெட் கீப்பராக இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,
தோனி ஓய்வு பற்றிய பேச்சுக்கள் பின்புலத்திற்குச் செல்ல தற்போது இளம் வீரர் ரிஷப் பந்த் குறித்து அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து அவருக்கு கடும் நெருக்கடி அளிக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் கபில்தேவும் இணைந்தார், அவர் கூறும்போது, “பந்து மட்டையில் இனிமையாகப் படும் அந்தத் தருணத்துக்காக ரிஷப் பந்த் காத்திருக்க வேண்டும், என்ன அவசரம்? அவரிடம் திறமையும் இளமையும் உள்ளது, பொறுமை என்னும் ஒரு புள்ளியில்தான் அவர் பணியாற்ற வேண்டியுள்ளது. வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு நூலளவுதன இடைவெளி.
ஷாட்டை கனெக்ட் செய்தால் ஹீரோ, முடியவில்லை எனில் அதே ஷாட் உன் பகைவனாகி விடும். எப்படி ஆடுவது என்ற முடிவு கடினமானதுதான், ஆனால் தாமதமாவதற்குள் அவர் முடிவெடுக்க வேண்டும். அவர் நினைத்த நேரத்தில் பவுண்டரிகள், சிக்சர்களை அடிக்கக் கூடியவர்தான், ஆனால் சில வேளைகளில் கொஞ்சம் நிதானித்து சாதுரியமாக முடிவெடுக்க வேண்டும்.
நானும் ஒரு டெஸ்ட் போட்டியில் (இங்கிலாந்துக்கு எதிராக 1984) நீக்கப்பட்டேன். ஆனால் நான் யாரையும் குறை கூறவில்லை, காரணம் நீக்குவதற்கான காரணத்தை நான் தான் ஏற்படுத்திக் கொடுத்தேன், அதேபோல் பந்த் தன்னை நீக்குவதற்கான காரணங்களை வழங்கக் கூடாது. அவரிடம் வெற்றிக்கான உந்துதல் உள்ளது, காலம்தான் விரைவில் அவரை மாற்றும், நாம் அவரை ஆதரிப்போம்” என்றார்.