தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கவுதம் கம்பீர் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்த் வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் பெரிய அளவில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர் என்று இடதுகை சைனமேன் ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
கேகேஆர் வெப்சைட்டில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:

கேகேஆருக்கு ஆடத் தொடங்கிய நாட்களில் கவுதம் கம்பீர் என் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். என்னுடன் நிறைய பேசியுள்ளார், கேகேஆர் ஆட்டங்களின் போது மட்டுமல்ல களத்துக்கு வெளியேயும் நிறைய பேசியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார்.
எப்போதும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருப்பார். கேப்டனின் ஆதரவு இருப்பது எந்த ஒரு வீரருக்கும் ஒரு பெரிய பிளஸ். நம்மை இது தன்னம்பிக்கையுடன் வைத்திருக்கும், இது நம் ஆட்டத்தில் பிரதிபலிக்கும்.

வாசிம் அக்ரம் சாருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். பவுலிங் பற்றி அதிகம் பேசமாட்டார், ஆனால் கடினமான சூழ்நிலைகளுக்கு எப்படித் தயாராவது, பேட்ஸ்மென் அடித்து நொறுக்கினால் என்ன செய்வது போன்றவற்றில் வாசிம் சார் பெரிய உதவி புரிந்துள்ளார்.
கேகேஆர் அணியில் அவருக்கு அருகில் அமர்ந்து அவரது எண்ணங்களை சரியாகப் பிடித்துக் கொண்டேன். ஒரு குறிப்பிட்ட சூழலில் நான் என்ன செய்வேன் என்று என்னிடம் கேட்பார், எனவே கவுத்தியைத் தவிர மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தியவர் வாசிம் அக்ரம்.
இவ்வாறு கூறினார் குல்தீப் யாதவ்