விராட்கோலி செய்த உடற்பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது கிடையாது என வங்காளதேச அணியின் கேப்டன் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் இணைய தள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், ‘2-3 வருடங்களுக்கு முன்பு விராட்கோலி உடற்பயிற்சி செய்வதை பார்த்து நான் வெட்கமடைந்தேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
ஏறக்குறைய எனது வயதையொட்டி இருக்கும் அவர் கடுமையான உடற்பயிற்சிகளை அதிகமாக மேற்கொண்டார். அவர் செய்த பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது கிடையாது. இந்தியா எங்களது அண்டை நாடு. அவர்கள் என்ன செய்கிறார்களோ, அது வங்காளதேசத்திலும் எதிரொலிக்கும்.

இந்தியாவில் என்ன நடைபெறுகிறதோ? அதனை தான் நாங்களும் பின்பற்றுவோம். உடல் தகுதி குறித்து இந்தியா எப்பொழுது தனது அணுகுமுறையை மாற்றி கொண்டதோ?, அது வங்காளதேசத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கள் அணியை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்பிகுர் ரஹிம் உடல் தகுதியை சிறப்பாக வைத்துள்ளார்’ என்று தெரிவித்தார்.
விராட் கோலி சிறந்த கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கெத்தாக வலம்வரும் இந்த சூழலில், அஷ்வினுடனான உரையாடலில், தான் கேப்டனாவதற்கு தோனி தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஷ்வினிடம் பேசிய விராட் கோலி, கேப்டனாவது என்பது எனது லட்சியங்களில் கண்டிப்பாக இருந்ததில்லை. ஆனால் தோனி கேப்டன்சியில் ஆடும்போது, அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு ஐடியா சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் சொல்லும் நிறைய விஷயங்களை தோனி ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனாலும் நான் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பேன். அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். நான் கேப்டன் ஆனதில், தோனிக்கு அதிக பங்குண்டு. என்னை நீண்டகாலமாக கவனித்து, கேப்டன் பொறுப்பிற்கு என்னை பரிந்துரைத்தார்.
சும்மா திடீரென போய், தேர்வாளர்களிடம் என்னை கேப்டனாக்குமாறு பரிந்துரைத்திருக்க மாட்டார். எனது செயல்பாடுகளையும், நான் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட விதத்தையும் கவனித்து உள்வாங்கிக்கொண்டுதான், என்னை கேப்டனாக்குமாறு சொல்லியிருப்பார். நான் கேப்டான் ஆனதில் தோனிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று கோலி தெரிவித்தார்.