பந்தை வேகமாக வீசுவதில் தேறிவிட்டேன்: புவனேஸ்வர் குமார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 252 ரன்கள் சேர்த்தது. குறைந்த ஸ்கோர் என்றாலும் ஆஸ்திரேலியாவை 200 ரன்னுக்குள் சுருட்டியது. இதற்கு முக்கிய காரணம் புவனேஸ்வர் குமார். அவர் 6.1 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதில் இரண்டு மெய்டன் ஓவர்கள் அடங்கும்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு கொல்கத்தாவில் கடும் மழை பெய்ததாலும், ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டதாலும் பந்து அதிக அளவில் ஸ்விங் ஆனது. அதேபோல் வேகப்பந்து வீச்சுக்கும் உதவியது. ஸ்விங் ஆடுகளத்தில் சிங்கமாக திகழும் புவனேஸ்குமார் இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

ஸ்விங் செய்வது என்படி என்று தனக்கு தெரிந்திருந்த நிலையில், தற்போது பந்தை நேர்த்தியாக வேகமாக வீசுவதில் தேறிவிட்டதாகக் கூறியுள்ளார். 120 முதல் 130 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசும் புவனேஸ்வர் குமார், தற்போது 140 கி.மீட்டர் வேகம் வரை வீசுகிறார்.

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘நான் முதலில் இந்திய அணியில் அறிமுகம் ஆகும்போது, அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க ஆடுகளம் பந்து ஸ்விங் ஆகும் சூழ்நிலை தேவைப்பட்டது.

அணிக்கு வந்தபின் சுமார் ஒரு வருடம் கழித்து, என்னுடைய பந்து வீச்சில் வேகத்தை அதிகரிக்க விரும்பினேன். ஆனால் அதை எப்படி செய்வது என்று எனக்கு எந்த ஐடியாவும் கிடைக்கவில்லை. ஷங்கர் பாசு எனக்கு மாறுபட்ட வகையான பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார். இறுதியில் அது எனக்கு பயன்பட்டு தற்போது வேகத்தை அதிகரித்துள்ளேன்.

வார்னருக்கு எதிராக அவுட்ஸ்விங் பந்து வீச நினைத்தேன். டெஸ்ட் போட்டிகளில் அவுட்ஸ்விங் பந்தில் அவர் ஏற்கனவே ஆட்டமிழந்துள்ளார். இதனால் அவுட்ஸ்விங் பந்து வீசினேன். அதில் வார்னர் வீழ்ந்தார்’’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.