2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம்பிடித்தால், அது அதிசயமாக இருக்கும். அது நடக்கும் என ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ஸ்ரீசாந்த். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என டெல்லி கோர்ட் ஸ்ரீசாந்தை வழக்கில் இருந்து விடுவித்தது. டெல்லி கோர்ட் விடுவித்தாலும் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை வழங்கியிருந்தது. அதை நீக்கவில்லை.

சமீபத்தில் ஸ்காட்லாந்தில் நடைபெற இருக்கும் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக பிசிசிஐ-யிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தார். ஆனால் பிசிசிஐ அவருக்கு சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே பிசிசிஐ வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிசிசிஐ அவர் மீதான வாழ்நாள் தடையை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் ஸ்ரீசாந்த் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு ஸ்ரீசாந்த் கூறுகையில் ‘‘எனது கனவு 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால் அது சாத்தியமற்றது என்பது எனக்குத் தெரியும். நான் உலகக்கோப்பையில் விளையாடினால், அது கண்டிப்பாக அதிசயமாக இருக்கும். அந்த அதிசயம் நடக்கும் என நான் நம்புகிறேன்.

முதலில் ஸ்காட்லாந்து டி20 லீக் தொடரில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் இலக்கு. அதன்பின் கேரள அணிக்காக விளையாட வேண்டும். பின்னர் இந்திய அணியில் இடம்பெற போராட வேண்டும்’’ என்றார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.