ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததோடு, தொடரையும் 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் போது தென்ஆப்பிரிக்க அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை.
மெதுவாக பந்து வீசிய புகார் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்க அணியினரின் போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.

அத்துடன் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்று இருந்த வெற்றி புள்ளியில் இருந்து 6 புள்ளிகள் பறிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணி 30 புள்ளிகள் பெற்று இருந்தது. அதில் இருந்து 6 புள்ளிகள் பறிக்கப்பட்டதால் தற்போது அந்த அணி கைவசம் 24 புள்ளிகள் மட்டுமே உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளி பறிப்புக்கு ஆளான முதல் அணி தென்ஆப்பிரிக்கா ஆகும்.
9 அணிகள் பங்கேற்றுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளி பட்டியலில் தென்ஆப்பிரிக்க அணி (7 டெஸ்டில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி) 7-வது இடத்தில் உள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த 27 தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து இரண்டு தொடர்களில் 9 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதன்மூலம் 146 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியா 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.