காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா… தரமான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய அணி !!

காயத்தால் விலகிய ரவீந்திர ஜடேஜா… தரமான இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்த இந்திய அணி

வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் யஷ் தயால் ஆகியோர் விலகியுள்ளனர்.

நியூசிலாந்து அணியுடனான நடப்பு கிரிக்கெட் தொடருக்கு பிறகு வங்கதேசம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து அணியுடனான நடப்பு தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் வங்கதேச அணியுடனான தொடரில் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளனர்.

டிசம்பர் 4ம் தேதி இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் யஸ் தயால் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முழுங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஆல் ரவுண்டர் சபாஷ் அஹமத் வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதாகவும் இந்திய அணி அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முதல்முறையாக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யஸ் தயாலும் காயம் காரணமாக வங்கதேச தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக குல்தீப் சென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ராஜத் படித்தர், ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் த்ரிபாட்டி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சபாஷ் அஹமத், அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

Mohamed:

This website uses cookies.