தற்போது இந்திய அணி தென்னாப்ரிக்காவிற்கு சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று (ஜனவரி 7) தென்னாபிரிக்காவில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது என தகவல் வந்துள்ளது. இதனால், இன்றைய போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஆகும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா புவனேஸ்வர் குமாரின் அபார பந்து வீச்சால் 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 11 ஓவரில் 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
2-வது நாள் ஆட்டத்திலும் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். புஜாரா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். ஆனால் அவரால் ரன்கள் குவிக்க இயலவில்லை. இதனால் இந்தியாவின் ஸ்கோர் உயர்வதற்குள் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன.
ரோகித் சர்மா 11 ரன்னிலும், அஸ்வின் 12 ரன்னிலும், சகா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 92 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்து திணறியது.
இதனால் இந்தியா 150 ரன்கள் தாண்டினாலே பெரிய விஷயம் என்ற சூழ்நிலை உருவானது. இந்த நிலையில்தான் ஹர்திக் பாண்டியா உடன் புவனேஸ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவை சரிவில் இருந்து மீட்டது. ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த புவனேஸ்வர் குமார் நிதானமாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் 200-ஐ நெருங்கியது.
இந்தியா 73.4 ஓவரில் 209 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா, பிலாண்டர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இந்தியா முதல் இன்னிங்சில் 77 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 77 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சால் தென்னாபிரிக்கா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் மூன்றாவது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக போகும் என்று எதிர்பார்த்த நிலையில், மழை குறிக்கிடுவதால், மூன்றாவது நாளின் முதல் சீசன் மழையால் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.