இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி, டூப்ளின் மைதானத்தில் நேற்று நடந்தது. அதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் 97 ரன்களும், ஷிகர் தவான் 74 ரன்களும் எடுத்தனர். ரெய்னா 10 ரன்னிலும், தோனி 11 ரன்னிலும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள். ரோஹித்தும், தவானும் முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தனர். டி20 போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது சிறந்த பார்ட்னர்ஷிப் இதுவேயாகும்.
இந்தியாவின் இந்த வெற்றி, பார்வையாளர்கள் எதிர்பார்த்தது தான். ஆனால், போட்டி ஒளிபரப்பு ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த தொடர் Sony Ten Sports 3, Sony Ten Sports 3 HD ஆகிய இரண்டு சேனலில் ஹிந்தி கமெண்ட்ரியுடன் இந்தியாவில் ஒளிபரப்பானது. Sony Six மற்றும் Sony Six HD சேனலில் ஆங்கில கமெண்ட்ரியில் ஒளிபரப்பானது.
கிரிக்கெட் போட்டிகளில், ஒவ்வொரு ஓவர்களின் போதும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும். அடுத்த ஓவர் தொடங்கும் போது, முதல் பந்தை தவற விடாமல், விளம்பரத்தை முடித்து லைவ் கொண்டு வரப்பட வேண்டும். இதில், Sony Six சேனலில் நேற்று நடந்த ஒளிபரப்பின் போது, பெரும்பாலான ஓவர்களில், பவுலர் ஓடிவந்து பேட்ஸ்மேனை நோக்கி முதல் பந்தை வீசும் அந்த தருணத்தில், விளம்பரம் முடிந்து லைவ் கொண்டுவரப்பட்டது. இதனால், ரசிகர்களின் சுவாரஸ்யம் குறைந்தது.
குறிப்பாக, இந்தியா பேட்டிங் செய்கையில், மூன்றாவது ஓவர் முடிந்தவுடன், நீண்ட நேரம் விளம்பரம் ஒளிபரப்பானது. அதை முடித்து, லைவ் கவர் செய்த போது, நான்காவது ஓவரில் இரண்டு பந்துகள் வீசப்பட்டு இருந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றாவது பந்தை பவுலர் வீச தயாராகும் போது, லைவ் கொண்டுவரப்பட்டது,
பொதுவாக, சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் போது, ஒவ்வொரு ஓவருக்குமான இடைவேளை நேரம் அதிகபட்சம் 30 நொடிகள் தான். அதற்குள் விளம்பரங்களை போட்டு முடித்துவிட வேண்டும். சில சமயம் 40 நொடிகள் வரை சில சேனல்கள் இழுப்பதுண்டு. ட்ரிங்க்ஸ் பிரேக் போன்ற சமயங்கள் விதிவிலக்கு.
ஐசிசி அஜெண்டாவின் படி, 40 நொடிகள் வரை விளம்பரம் சென்றாலும், ரீ-பிளே, கமெண்ட்ரி, ஆடியன்ஸ் கேமரா வியூ போன்றவை சரியான நேரத்தில் ரசிகர்களுக்கு கிடைத்துவிட வேண்டும். அதை மீறும் பட்சத்தில், ஐசிசி அந்த குறிப்பிட்ட சேனலுக்கான ஒளிபரப்பு உரிமையை அடுத்துமுறை வழங்காது. ஒருவேளை வழங்கினாலும், கடுமையான கண்டிஷன்கள் போடப்படும்.
ஆனால், அயர்லாந்துக்கு எதிரான தொடரில், பெரும்பாலான ஓவர்களின் போது, நெக் ஆஃப் தி மொமண்டில் லைவ் கொண்டுவரப்பட்டது. அதிலும், நான்காவது ஓவரில் 2 பந்துகள் முடிந்து லைவ் ஒளிபரப்பியது ஏற்றுக் கொள்ளவே முடியாத விஷயமாகும்.