இந்தியா – இலங்கை 2வது டி20 : தொடரை தூக்க தயாராகும் இந்திய அணி

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டி இந்துாரில் இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்துாரில் இன்று நடக்கிறது.

ஸ்ரேயாஸ் நம்பிக்கை:

‘ரெகுலர்’ கேப்டன் விராத் கோஹ்லி, துவக்க வீரர் ஷிகர் தவான், வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இல்லாத நிலையில் இளம் இந்திய வீரர்கள் தொடரை வெற்றியுடன் துவக்கி இருப்பது சிறப்பு. இதற்கு ஐ.பி.எல்., அனுபவம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் அரைசதமடித்த துவக்க வீரர் லோகேஷ் ராகுல், மீண்டும் கைகொடுக்கலாம்.

கேப்டன் ரோகித் சர்மா, சிக்சர் மழை பொழிந்தால் நல்ல துவக்கம் கிடைக்கும். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் ஐயர், நம்பிக்கை அளிக்கிறார். முன்னாள் கேப்டன் தோனி, மீண்டும் 4வது இடத்தில் களமிறக்கப்படலாம். ‘மிடில்-ஆர்டரில்’ மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினால் இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.

சகால் அசத்தல்

வேகப்பந்துவீச்சில் ‘ஆல்-ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா பலம் சேர்க்கிறார். இவருக்கு ஜெயதேவ் உனத்கத் ஒத்துழைப்பு அளித்தால் நல்லது. முதல் போட்டியில் ‘சுழலில்’ அசத்திய யுவேந்திர சகால் (4 விக்.,), குல்தீப் யாதவ் (2 விக்.,) விக்கெட் வேட்டை நடத்தினர். இவர்களது ‘சுழல் ஜாலம்’ இன்றும் தொடர்ந்தால் சுலப வெற்றி பெறலாம்.

கட்டாய வெற்றி

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, இன்று வெற்றி பெற்றால் மட்டுமே, தொடரை கைப்பற்றும் போட்டியில் நீடிக்க முடியும். ஒருவேளை தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும். டிக்வெல்லா எழுச்சி கண்டால் இலங்கை அணிக்கு நல்ல துவக்கம் தரலாம். மாத்யூஸ், கேப்டன் திசாரா பெரேரா, உபுல் தரங்கா, இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். துஸ்மந்தா சமீரா, தனஜ்செயா டி சில்வா, குணரத்னே, ஷனாகா உள்ளிட்டோர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

இலங்கை அணியின் பந்துவீச்சு கவலை அளிக்கிறது. கடந்த போட்டியில் அறிமுகமான விஷ்வா பெர்ணான்டோ, வேகப்பந்துவீச்சில் எழுச்சி காண வேண்டும். மாத்யூஸ், திசாரா பெரேரா, நுவான் பிரதீப் உள்ளிட்டோர் துல்லியமாக பந்துவீசினால் ரன் வழங்குவதை தவிர்த்து, விக்கெட் வேட்டை நடத்தலாம். ‘சுழலில்’ அகிலா தனன்ஜெயா கைகொடுத்தால் நல்லது.

முதன் முதலாய்…

ம.பி., மாநிலம் இந்துாரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில், முதன்முறையாக சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டி இன்று நடக்கவுள்ளது. இதுவரை இங்கு, ஒரே ஒரு டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

மழை வருமா

இந்துாரில் (ம.பி.,) இன்றைய வெப்பநிலை அதிகபட்சம் 27, குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் தெளிவாக இருக்கும் என்பதால், மழை வர வாய்ப்பு இல்லை.

ஆடுகளம் எப்படி

இந்துாரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2011ல் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், முதலில் ‘பேட்டிங்’ செய்த இந்திய அணி, 418 ரன்கள் குவித்தது.

இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ‘டாஸ்’ வெல்லும் அணி, முதலில் ‘பீல்டிங்’ செய்தால் நல்லது. இதுகுறித்து மைதான பராமரிப்பாளர் சமந்தர் சிங் சவுகான் கூறுகையில், ”பனிப்பொழிவு 7:45 மணி வரை இருக்க வாய்ப்பு இல்லை. இதனால் முதல் 10 ஓவர்களை பவுலர்கள் எவ்வித சிரமமின்றி பந்துவீசலாம். எனவே ‘டாஸ்’ வெல்லும் அணி, முதலில் ‘பீல்டிங்’ செய்தால் நன்றாக இருக்கும்,” என்றார்.

Editor:

This website uses cookies.