இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி தாக்கு பிடித்து ஆடி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கைவிட்ட இரண்டு கேட்சுகளில் கிடைத்த வாய்ப்பினை மிக அருமையாக உபயோகித்து வருகிறது இலங்கை அணி. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கேப்டன் தினேஷ் சண்டிமால் உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் கூட விடாமல் இலங்கை அணியின் ஸ்கோரை 192-3 என உயர்த்தி உள்ளது. ஆஞ்சலோ மேத்யூஸ் 194 பந்துகளுக்கு 90 ரன்னுடனும், சந்திமால் 165 பந்துகளுக்கு 52 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் கடந்து அபாரமாக ஆடினார்.
தில்லியில் இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. முன்னதாக தொடக்க வீரர் முரளி விஜய் 155 ரன்கள் விளாசினார். தவன், புஜாரா தலா 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரஹானே ஒரு ரன்னில் வீழ்ந்தார். கோலி அருமையாக ஆடி சதம் கடந்தார்.
இந்நிலையில், 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை கோலி 156, ரோஹித் சர்மா 6 ரன்களுடன் தொடங்கினர். நிதானமாக ஆடிவந்த கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 6-ஆவது இரட்டைச் சதத்தை எட்டினார். அதனை அவர் 238 பந்துகளில் 20 பவுண்டரிகளுடன் விளாசியிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் சர்மா 88 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்தார். எனினும், 65 ரன்கள் எடுத்த நிலையில் சன்டகன் பந்துவீச்சில் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த அஸ்வின் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் நிலைத்து நின்ற கோலி நிதானமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் 287 பந்துகளில் 25 பவுண்டரிகளுடன் 243 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் சன்டகன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். கோலியைத் தொடர்ந்து ஜடேஜா களம் காண, சிறிது நேரத்தில் டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்து.
அப்போது அணியின் ஸ்கோர் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்களாக இருந்தது. சாஹா 9, ஜடேஜா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் சன்டகன் அதிகபட்சமாக 4, கமகே 2, பெரேரா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இலங்கை-131/3:
தொடக்க வீரர் கருணாரத்னே முதல் பந்திலேயே அவுட் ஆக, உடன் வந்த தில்ருவன் பெரேரா 42 ரன்களுக்கு நிலைத்தார். அடுத்து வந்த தனஞ்ஜெய டி சில்வா ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். இந்திய தரப்பில் முகமது சமி, இஷாந்த் சர்மா, ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இலங்கை இன்னும் 344 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.