சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது செல்போன், பதாகைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது செல்போன், பதாகைகள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இங்கு ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம் வலுத்து வரும் நிலையில் இங்கு போட்டிகளை நடத்தக் கூடாது என சில அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
சேப்பாக்கம் மைதானத்தை போட்டி நடைபெறும்போது முற்றுகையிடுவோம் என்றும், ரசிகர்கள் போல டிக்கெட் எடுத்து மைதானத்திற்குள் சென்று எதிர்ப்பை காட்டுவோம் என்றும் சில அமைப்புகள் கூறியிருக்கின்றன. எனினும் பலத்த பாதுகாப்புடன் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துவிட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல கட்டுப்பாடுகளை விதித்து இன்று (ஏப்ரல் 9) சேப்பாக்கம் மைதான பொறுப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டனர். அதன்படி, ‘சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு நாளை நடைபெறும் போட்டியின்போது செல்போன், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது.
பேனர்கள், கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மைதானத்திற்குள் பொருட்களை வீசுபவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர். மைதானத்திற்குள் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது’ உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்புக்கு போலீஸ் ஏற்பாடு செய்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் சென்னை போட்டிகளை மட்டும் திருவனந்தபுரத்திற்கு மாற்ற இருப்பதாக இரு தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. கேரள மாநில கிரிக்கெட் சங்கம் இதற்கு ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் திடீரென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும், ஐபிஎல் நிர்வாகமும் சென்னையிலேயே இந்தப் போட்டியை நடத்துவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டன. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா இதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது. மாற்றும் எண்ணமும் இல்லை. ஐபிஎல்லை அரசியல் ஆக்க வேண்டாம்” என்றார்.
காவிரி பிரச்னைக்காக போராடும் அமைப்புகளை ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. எனவே ஐபிஎல் போட்டிக்கு எதிராக போட்டி நடைபெறும் தினமான ஏப்ரல் 10-ம் தேதி (செவ்வாய்கிழமை) மாலையில் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பல்வேறு கட்சிகளும் அமைப்புகள் முடிவு செய்திருக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன், ‘முற்றுகைப் போராட்டம் மட்டுமல்ல, ரசிகர்கள் போலவே எங்கள் தொண்டர்களும் கிரிக்கெட் போட்டியைக் காண டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறார்கள். போட்டி நடைபெறும்போது மைதானத்தின் உள்ளேயே அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள்’ என்றார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்ட அறிவிப்பில், ‘எதிர்ப்பை மீறி சென்னையில் ஐபிஎல் நடத்தினால், வீரர்களை சிறை பிடிப்போம்’ என ஏற்கனவே அறிவித்தார். எனவே அவரது அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்கிழமை சென்னையில் பதற்றத்திற்கும் பரபரப்புக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கிறது.