இந்தியன் சூப்பர் லீக் 2017-18 சீசன் கால்பந்து தொடரின் தொடக்க போட்டி கொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடத்தப்பட இருக்கிறது.
கிரிக்கெட்டில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவது போல் கால்பந்து போட்டியில் கடந்த 2014-ல் இருந்த இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று வருடங்கள் வெற்றிகரகமாக நடைபெற்றதால், 2017-18-ல் நடக்கும் 4-வது சீசனில் இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் பிப்ரவரி 9-ந்தேதி வரை சுமார் 90 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இதற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி கொல்கத்தாவில் தொடக்க விழா மற்றும் துவக்க ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.
சமீபத்தில் இந்தியாவில் பிஃபா 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தனர். அத்துடன் போட்டியும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டது.
இதனால் ஐ.எஸ்.எல். ஒருங்கிணைப்பாளர்கள் தொடரின் இறுதிப் போட்டியை கொல்கத்தாவிற்கு மாற்றியுள்ளனர். அதேவேளையில் தொடக்க போட்டி கொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 9-ந்தேதி கொல்கத்தா – கேரளா அணிகள் மோதும் போட்டி கொச்சியில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி பழைய அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஐ.எஸ்.எல். தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தா, பெங்களூரு எஃப்.சி., சென்னையின் எஃப்.சி, டெல்லி டைனமோஸ், எஃப்.சி. கோவா, ஜாம்ஷெத்பூர் எஃப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, வடகிழக்கு யுனைடெட் மற்றும் புனே சிட்டி அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பெங்களூரு எஃப்.சி, ஜாம்ஷெத்பூர் அணிகள் புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தில் சாலை பயணத்தின் போது காரை திடீரென நிறுத்திய சச்சின் தெண்டுல்கர், மோட்டார் சைக்கிளில் செல்வோரிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் திருவனந்தபுரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 4-வது தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர் தெண்டுல்கர் விமான நிலையத்துக்கு காரில் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதை கண்டார்.
உடனே அவர் காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். தெண்டுல்கரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
அப்போது அந்த வழியாக கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஹெல்மெட் அணியாமல் வந்தார். இதனை கவனித்த தெண்டுல்கர், அந்த பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் பயணம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
தெண்டுல்கரை நேரில் பார்த்ததும் அந்த பெண் சிறிது நேரம் திகைத்து போனார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அந்த பெண், வருத்தம் தெரிவித்ததுடன், இனிமேல் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வேன் என்று தெண்டுல்கரிடம் உறுதி அளித்தார்.
தெண்டுல்கர் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரசார காட்சிகள் வீடியோ பதிவாக முகநூலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.