இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற பிசிசிஐ மற்றும் பிசிசி முயற்சி எடுக்க வேண்டும் என்று மியான்தத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கிரிக்கெட் நடைபெற பிசிசிஐ, பிசிபி முயற்சி எடுக்க வேண்டும்- மியான்தத்
கிரிக்கெட்டில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடருக்குப்பின் அதிக ரசிகர்கள் விரும்பி பார்ப்பது இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரைத்தான். மிகவும் பரபரப்பானதாக விளையாடப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது இருநாடுகளுக்கிடையிலான பிரச்சனையால் முடங்கி போய் கிடக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் நடைபெற எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தது. ஆனால், மத்திய அரசு அனுமதி இல்லாமல் எக்காரணம் கொண்டும் கிரிக்கெட் கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இணைந்து மத்திய அரசுகளை சம்மதிக்க வைத்து தொடரை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் மியான்தத் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மியான்தத் கூறுகையில் ‘‘இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தானும் ஒரே கோர்ட்டில் நின்று இந்தியா – பாகிஸ்தான் தொடருக்கு மத்திய அரசுகளை சம்மதிக்க வைக்க இதுவே சரியான நேரம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இருநாட்டு தொடரில் விளையாடாவிடில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அல்லது ஐசிசி கொண்டு வர இருக்கும் லீக்கின் நோக்கம் என்ன?. இரண்டு நாடுகளும் பிரச்சினைகள் குறித்து பேசி முடிவிற்கு வந்தால், ஆஷஸ் தொடரை மிகப்பெரிய தொடராக இருக்கும்.

அரசியல் தொடர்பான பிரச்சினை பெரிய விஷயம் அல்ல. கடந்த காலங்களில் நாங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான தீவிரமான பிரச்சினை இருக்கும்போதே விளையாடியுள்ளோம். அது இருநாடு உறவிற்கும் உதவியது’’ என்றார்.