இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான ஆட்டத்தில் சூப்பர் ஓவரும் டையானதால் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது நியூசிலாந்து. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 89 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் கடந்தனர். பட்லர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் (2), பிளங்கட் (10) அவுட்டாகினர்.
பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஒற்றை ஆளாய் இறுதி வரை நம்பிக்கையுடன் போராடினார். இறுதி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் என்ற கட்டாயத்திற்கு ஆளானது இங்கிலாந்து. அந்த ஓவரை டிரெண்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கண் முன் வந்து போகியது. 3-வது பந்தில் ஆறு ரன்கள் எடுத்து அசத்தினார் பென் ஸ்டோக்ஸ். அடுத்த பந்திலும், ஓவர்த்ரோ மூலம் ஆறு ரன்களை எடுத்தார். இதையடுத்து இங்கிலாந்து ரசிகர்கள் பெரு மூச்சு விட்டனர்.
ஆனால், 5- வது பந்தில் 2 ரன் எடுக்கும் முயற்சியில் அடில் ரஷித் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய இருந்த போது 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 241 எடுக்க மேட்ச் “டை” ஆனது. அதனையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின், பௌல்ட் பந்துவீசினார். சூப்பர் ஓவரில் இங்கிலாந்து 15 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து சூப்பர் ஓவரில் களமிறங்கியது.
இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்கர் வீசிய சூப்பர் ஓவரை நியூசிலாந்தின் நீஷம், குப்தில் ஜோடி எதிர்கொண்டது. முதல் பந்து ஓயுடு பால் ஆனது. அதற்கு அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் சிக்ஸர் பறந்தது. அடுத்த இரண்டு பந்துகளில் முறையே 4 ரன்கள் கிடைத்தது நியூசிலாந்துக்கு. நொடிக்கு நொடி பரபரப்பின் உச்சம் அதிகரித்தது.
இந்த சூப்பர் ஓவரிலும் கடைசி இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 2-வது ரன் எடுக்கும் போது குப்தில் ரன் அவுட் ஆனார். அதனால், சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. இதையடுத்து அதிக பவுண்டரி அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் துரதிஷ்டவசமாக உலகக்கோப்பை வெல்லும் வெல்லும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்தது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது இங்கிலாந்து.
Kids, don’t take up sport. Take up baking or something. Die at 60 really fat and happy.
— Jimmy Neesham (@JimmyNeesh) July 15, 2019