என் விஸ்வாசம் எப்பவும் மும்பை இந்தியன்ஸுக்கு தான்… திடீரென ஓய்வை அறிவித்தார் பொலார்ட்!!

மும்பை அணி செய்த காரியத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்த நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்ட் ..

ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

ரோஹித் சர்மாவிற்கு பிறகு மும்பை அணியில் முக்கிய பொறுப்பாற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பொல்லார்ட்., பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டில் மட்டுமில்லாமல் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் அணியை வழிநடத்துவதிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உறுதுணையாக திகழ்ந்தார்.

 

13 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பொல்லார்ட், கடந்த 2022 ஐபிஎல் தொடரில் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். 2022 ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய பொல்லார்ட் பேட்டிங்கில் 144 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் நான்கு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம், பொல்லார்ட்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு வேறொரு அதிரடி வீரரை அணியில் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஓய்வு அறிவித்த நட்சத்திர ஆல்ரவுண்டர் பொல்லார்ட்..

இதனை விரும்பாத பொல்லார்ட் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பொல்லார்ட் தெரிவிக்கையில்,“இந்த ஓய்வு முடிவு சாதாரணமாக எடுத்த முடிவு கிடையாது, நான் இன்னும் சில ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக திட்டமிட்டிருந்தேன். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி வேறொரு திட்டத்தை எனக்காக வைத்திருக்கிறது, இனியும் மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் விளையாடுவென் என தெரியவில்லை, ஒருமுறை MI வீரர் என்றால் எப்பொழுதுமே MI வீரர் தான். இது நான் சோகமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு குட்-பை சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். நிச்சயம் என்னுடைய அடுத்த அத்தியாயம் பேட்டிங் பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செயலாற்றுவதுதான், அதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறேன், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விளங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 13 சீசன் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன், உலகின் தலைசிறந்த வீரர்களுடன் விளையாடியதையும் எப்பொழுதும் அணிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்காக விளையாடியதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் அணியின் பயிற்சியாளர் மேனேஜர் மற்றும் சப்போர்ட் ஸ்டாப் என அனைவருக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக அணியில் எனக்கு நல்ல நண்பனாக இருந்த ராபின் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் என் மீது அன்பும் மரியாதையும் காட்டிய முகேஷ், நித்ரா மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் இது வெறும் வார்த்தை மட்டும் கிடையாது,” என்று மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து மிக உருக்கமான பதிவை பொல்லார்ட் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.