குட்டிகுட்டி டீம ஈஸியா அடிச்சீட்டிங்க.. இந்த 3 ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் உங்களை ஓடவிட்டு அடிக்கப்போறங்க – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேச்சு!

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இந்த 3 ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள் என்று ரஷீத் லத்திப் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே பல வருடங்களாக நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இம்முறை இந்தியாவில் நடக்க உள்ளது. வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று நாக்பூர் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது.

2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர், அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை நடைபெற்ற டெஸ்ட் தொடர் என கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களையும் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இம்முறை இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்கிற முனைப்பில் ஒரு வாரத்திற்கு முன்னரே இந்தியாவிற்கு வந்து இந்திய மைதானங்களுக்கு ஏற்றவாறு நுணுக்கமாக பயிற்சிகளையும் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலியா அணியினர் ஸ்பின்னர்களை எப்படி சமாளிப்பது என்று பிரத்தியேகமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களும் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி நாக்பூர் சென்று அப்போதிருந்தே தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் இந்தியாவிற்கும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் குறைந்தபட்சம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே இந்த வருடம் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும்.

இந்நிலையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இந்த மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் இருப்பார்கள் என கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப். அவர் பேசியதாவது:

டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஜானே ஆகிய இரு சிறந்த பேட்ஸ்மேன்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவஜா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் கடந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறந்த பார்மில் இருந்தனர். எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருந்து கொண்டிருக்கின்றனர். இந்திய அணிக்கு அச்சுறுத்தலாகவும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஏனெனில் மூவருமே நன்றாக ஸ்பின்னர்களை ஆடக்கூடியவர்கள் மற்றும் ஸ்வீப் ஷாட்களும் பிரத்தியேகமாக விளையாடக்கூடியவர்கள். இந்திய துணைக்கண்டங்களில் இவர்களது பேட்டிங் நன்றாக எடுபடும். அவர்களை சமாளிப்பதற்கு இந்திய ஸ்பின்னர்கள் திணறுவார்கள்.” என்றார்.

“சமீபகாலமாக இந்திய அணிக்கு இத்தகைய ஒரு சவால் வந்ததில்லை. இந்தமுறை கடும் சவாலாக இருக்கப்போகிறது. எப்படி சமாளிப்பார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.” என்றும் தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.