இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஏஞ்ஜெலோ மேத்யூஸ் முழு உடல் தகுதியுடன் உள்ளார் என்று அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் 111 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அந்த ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள 3-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
எனினும், அவர் உள்பட அணியில் உள்ள 15 வீரர்களும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர் என்று அந்த அணியின் மேலாளர் (டீம் மேனேஜர்) அஸன்கா குருசின்ஹா தெரிவித்தார்.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மேத்யூஸ் முழு உடல் தகுதியுடன் உள்ளார். தசைப்பிடிப்பு பிரச்னையிலிருந்து அவர் மீண்டு வந்துவிட்டார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியின்போது அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஈடுபட்டார்’ என்றார்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கையும், மொஹாலியில் நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் உள்ளன.
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறும் அணி, ஒரு நாள் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.