பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 உலகக் கோப்பையுடன் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து புதிய பயிற்சியாளர் குழுவை தேர்வு செய்யும் பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
. இந்தப் பதவிக்கு பல முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்தப் பட்டியலில் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல் ஹக் பெயர் முதலில் இருந்தது. அத்துடன் அவரை தேர்வுக்குழு தலைவராக நியமிக்கவும் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக மிஸ்பா-உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மிஸ்பா உல் ஹக் கூறுகையில் “இது மிகவும் சவாலான பதவி என்றாலும் நான் இதற்கு தயாராக உள்ளேன். பாகிஸ்தானில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் உள்ளனர். நான் அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து சிறப்பாக விளையாட உதவி செய்வேன். அத்துடன் வக்கார் யூனிஸ் உடன் இணைந்து பணியாற்ற மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

PSL which will be held in United Arab Emirates in February-March 2017. / AFP / AAMIR QURESHI (Photo credit should read AAMIR QURESHI/AFP/Getty Images)
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பதவிகளை வக்கார் யூனிஸ் ஏற்கெனவே வகித்திருக்கிறார். இந்தச் சூழலில் மீண்டும் அவர் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
இருவருடனும் ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறைப்படி இருவரையும் பயிற்சியாளர்களாக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் விருப்பப்படி துணைப் பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ள, அணித் தேர்வில் ஈடுபட அதிகாரம் வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2023 உலகக் கோப்பை வரை வழங்கப்பட உள்ளது.