தோனி அடுத்த தொடரில் விளையாடுவாரா…? உண்மை தெரிந்த ஒரே ஒரு ஆள் இவர் மட்டும் தான்; பயிற்சியாளர் வெளியிட்ட தகவல் !!

தோனி அடுத்த தொடரில் விளையாடுவாரா…? உண்மை தெரிந்த ஒரே ஒரு ஆள் இவர் மட்டும் தான்; பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்

அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து தங்களுக்கு எதுவுமே தெரியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் அடையாளமான தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ரசிகர்களுக்காகவும் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அறிவித்திருந்தார்.

சொல்லியது போலவே கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, நடப்பு ஐபிஎல் தொடர் துவங்குற்கு ஒரு நாள் முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, கேப்டன் பதவியை இளம் வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.

கேப்டன் பொறுப்பு இல்லாமல் ஒரு தொடரில் ஜாலியாகவும், ரசிகர்களுக்காவும் மட்டும் விளையாட விரும்புவதாக கூறியிருந்தது போலவே நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தோனி சென்னை அணியின் சில வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்ந்தார்.

பெங்களூர் அணிக்கு எதிரான கடைசி போட்டியிலும் சென்னை அணிக்கான தனது பங்களிப்பை முடிந்தவரை சரியாக செய்த தோனி, போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுக்க முடியாமல் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்தது.

சென்னை அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால் தோனிக்கு பெங்களூர் அணியுடனான போட்டியே கடைசி போட்டியாக இருக்குமா இல்லை, சென்னை மண்ணில் தான் தனது கடைசி போட்டியும் இருக்கும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தோனி அடுத்த தொடரிலும் விளையாடுவாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் தோனி அடுத்த தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரியாமல் குழம்பி இருக்கும் நிலையில், தோனியின் ஓய்வு முடிவு குறித்து தோனியை தவிர வேறு யாருக்கும் எதுவும் தெரியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எரிக் சிம்மன்ஸ் பேசுகையில், “தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி தெரிந்த ஒரே நபர் தோனி மட்டும் தான். அவரது கிரிக்கெட் எதிர்காலத்தை பற்றி யோசித்தால் நம்மால் எதையுமே சரியாக கணிக்கவே முடியாது, தலை சுற்றிவிடும். அவர் என்ன செய்ய போகிறார் என்பதை அவர் தான் முடிவு செய்வார். அவராக சொல்லும் வரை யாருக்கும் எதுவும் தெரியாது. தோனி மிக சிறந்த கிரிக்கெட் வீரர். தோனியை போன்று யாராலும் கிரிக்கெட்டை மிக இலகுவாக புரிந்து கொள்ள முடியாது. தோனி எப்போதும் தோனி தான்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.