சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சோபர்ஸ் ஜோபன், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இதுவரை சென்றதில்லை என்று அவரது தந்தை பல்ஜீத் ஜோபன் தெரிவித்தார்.
பிரிட்டனை சேர்ந்த செய்தியாளர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட விருப்பம் இருப்பவர்கள் போல் நடித்து, சூதாட்டத் தரகர்களிடம் பேரம் பேசியுள்ளது போன்ற விடியோ “தி சன்’ செய்தி இணையதளத்தில் வெளியானது.
அந்த விடியோவில் இருக்கும் சூதாட்டக்காரர்கள் இருவரும் இந்தியர்கள் என்றும் அவர்களின் பெயர்கள் சோபர்ஸ் ஜோபன், பிரியங் சக்ஸேனா என்றும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் டெல்லி அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தற்போது அவருக்கு 31 வயதாகிறது.
மேலும், “ஸ்பாட் ஃபிக்ஸிங்’ செய்ய ஒப்புக்கொண்ட வீரர், ஆட்டத்தின்போது எப்படியெல்லாம் சிக்னல் தருவார் என்பது குறித்தும் சூதாட்டத்தரகர்கள் தெரிவிப்பது போன்ற காட்சிகள் விடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அந்த விடியோவில் இருக்கும் சோபர்ஸ் ஜோபனின் தந்தை பல்ஜீத் ஜோபன், தில்லியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
எனது மகன் இதுவரை பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றதில்லை.துபை, ரஷியா ஆகிய நாடுகளுக்கு அவ்வப்போது சென்று திரும்புவார்.
அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ரஷிய பெண்ணைக் காண வேண்டி, அந்த நாட்டுக்கு செல்வார். ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து யாரும் எங்களை தொடர்புகொள்ளவில்லை.
மகனின் நட்பு வட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் சதி அடங்கியிருக்கிறது என்றார் பல்ஜீத் ஜோபன்.
இவர், தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்க (டிடிசிஏ) நிர்வாகத்தில் மேலாளராக பணிபுரிந்தவர் என்பதும், ரூ.1.5 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், பதவியிலிருந்து நீக்கப்பட்ட அந்த சங்கத்தின் தலைவர் சினேஹ் பன்சாலுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்படி அவன் சூதாட்ட புகாரில் சிக்கி இருந்தால் அவனை தூக்கிலிடுங்கள். தப்பு செய்தவர் தண்டனை பெற்றே ஆக வேண்டும்.
டிடிசிஏ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 2007 முதல் 2008-ஆம் ஆண்டு வரை தில்லி யு-23 கிரிக்கெட் அணியில் சோபர்ஸ் ஜோபன் விளையாடியுள்ளார். அவர் ஒரு சராசரி ஆட்டக்காரர். கிரிக்கெட் வட்டாரத்தில் தந்தையும், மகனும் அதிக செல்வாக்குக் கொண்டவர்கள்’ என்றார்.