இந்திய கிரிக்கெட் பிரபலம் விராட் கோலியும் அவருடைய காதலியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள்.
நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து கோலி – அனுஷ்கா தம்பதியரின் திட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டிசம்பர் 21 அன்று தில்லியில் உறவினர்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது. டிசம்பர் 26 அன்று மும்பையில் திரைத்துறையினர் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கான வரவேற்பு நடைபெறவுள்ளது.
மும்பை வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்வார்கள். அங்கு டெஸ்ட் தொடருக்காக கோலி தயாராவார். புத்தாண்டை கோலியுடன் அங்குக் கொண்டாடவுள்ள அனுஷ்கா
சர்மா, ஜனவரி முதல் வாரம் இந்தியாவுக்குத் திரும்புவார். மும்பையில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிக்கும் ஆனந்த் எல் ராய் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார். பிப்ரவரியில் வருண் தவனுடனான படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார். பிப்ரவரி 9 அன்று வெளியாகவுள்ள Pari படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் அனுஷ்கா கலந்துகொள்வார்.
விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்று 2 மாதம் அங்கேயே இருப்பார்.
திருமணத்துக்குப் பிறகு தில்லியிலிருந்து திரும்பியவுடன் இருவரும் மும்பை வோர்லிக்கு இடம்பெயர்ந்து புதிய வீட்டில் வசிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இத்தாலியில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் இவர்களை வாழ்த்திப் பதிவு செய்துள்ள டிவிட் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
அனுஷ்கா நாயகியாக இந்தி திரையுலகிற்கு அறிமுகமான படம் ‘ரப் நீ பணா டி ஜோடி’. இந்தப் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக அவர் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் அனுஷ்கா தன்னை விட வயதில் மிகவும் மூத்தவரான ஷாருக் கானை சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்வார். இருவரும் நண்பர்களைப் போல் ஒரே வீட்டில் வசித்து வர, தனக்கு அனுஷ்கா மீதுள்ள அளவுக்கதிகமான காதலை எப்படி அவரிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் ஷாருக் கான் தடுமாற, அனுஷ்கா நடனம் பயிலும் அதே வகுப்பில் வேடம் அணிந்து ஷாருக் கான் சேர்வார். அங்கு அனுஷ்காவின் மிக நெருங்கிய நண்பனாக மாறி அவரை தான் காதலிப்பதாகக் கூறுவார். இவர்கள் இருவரும் ஒருவரே என்று அறியாத அனுஷ்கா யாரைத் தேர்வு செய்வது என்று புரியாமல் தவிக்கக் கடைசியில் தன்னுடைய கணவன் ஷாருக் கானையே தேர்வு செய்வார்.
‘ரப் நீ பணா டி ஜோடி’ என்பதற்கு ‘கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட ஜோடி’ அல்லது ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்ட ஜோடி’ என்பது அர்த்தம். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் சரியாக 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தப் படத்தில் ஷிரேயா கோஷலின் குரலில் இசைத்த பாடலான “துஜே மேன் ரப் திக்ஷிதா, யாரா மே கியா கரோ” பாடல் இந்தியா முழுவதிலும் அதிலும் குறிப்பாக பல தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு பாடல்.
இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் இனைந்து நடித்த ஷாருக் கான் விராட் மற்றும் அனுஷ்காவின் திருமண புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி “நீங்கள் இருவரும் உண்மையான ரப் நீ பணா டி ஜோடி. நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ அந்த ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்” என்று பதிவு செய்து தன்னுடை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.