கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். தோனியுடன், விராட் கோலி வெற்றிக் களிப்பில் இருப்பது போல் படத்தை பதிவிட்டார். அத்துடன், “என்னால் மறக்க முடியாத ஒரு போட்டி. ஸ்பெஷலான இரவு. பிட்னஸ் தேர்வைப் போல் இந்த மனிதர்(தோனி) என்னை ஓட வைத்தார்” என்றும் அந்த ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
விராட் கோலியின் இந்த ட்வீட்டர் பதிவு, தோனி தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் புரிந்துக் கொண்டனர். இதனையடுத்து, கோலியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். சச்சின் உள்ளிட்ட மூத்த நட்சத்திர வீரர்கள் அனைவருக்கும் ஃபேர்வெல் போட்டி வைப்பது வழக்கம். ஆனால், ஃபேர்வெல் போட்டி இல்லாமல் தோனி ஓய்வை அறிவிக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test ? @msdhoni ?? pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
மார்ச் 27 நடந்த இந்தப் போட்டியை ஏன் விராட் கோலி தற்போது பதிவிட்டுள்ளார் என்பது ரசிகர்களின் இந்த சந்தேகத்திற்கு வித்திட்டுள்ளது. இன்று மாலை 7 மணிக்கு தோனி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
உண்மையில் விராட் கோலி பதிவிட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்தப் போட்டி மிகவும் முக்கியமான ஒன்றுதான். அது கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டி. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 160 ரன்கள் எடுத்தது. 161 ரன் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா(12), ஷிகர் தவான்(13), ரெய்னா(10) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 7.4 ஓவரில் 49 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்தது இந்திய அணி தடுமாறியது. அப்போது, களமிறங்கிய விராட் கோலி தொடக்கத்தில் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
யுவராஜ் சிங்கும் 21 ரன்னில் ஆட்டமிழக்க, விராட் கோலியுடன் தோனி ஜோடி சேர்ந்தார். யுவராஜ் ஆட்டமிழக்கும் போது விராட் கோலி 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தார். தோனி களமிறங்கியது விராட் கோலியின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. இறுதியில் 19.1 ஓவரில் 161 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 51 பந்துகளில் 82 ரன்களுடனும், தோனி 10 பந்துகளில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 4 இரண்டு ரன்களை விராட் கோலி எடுத்தார். தோனியின் மின்னல் வேக ஓட்டம் விராட் கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தது. இதனைத்தான் இன்றைய ட்விட்டர் பதிவில் கோலி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தப் பதிவை இன்று ஏன் விராட் கோலி பதிவிட்டுள்ளார் என்பதே ரசிகளை குழப்பிவிட்டது. எம்எஸ் டோனியுடனான முக்கியமா நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வை முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள பிசிசிஐ தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியதாவது…
தற்போது வரை தோனி எந்தவிதமான ஓய்வு முடிவையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. பிசிசிஐ தொடர்பாக அவர் எந்த செய்திகளையும் கூறவில்லை. அவர் ஓய்வை அறிவிக்கப் போவதாக வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.