இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் ஒருவராக உமேஷ் யாதவ் திகழ்கிறார். ‘விதர்பா எக்ஸ்பிரஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் உமேஷ் யாதவ், கடந்த சீசனில் இந்திய மண்ணில் நடைபெற்ற 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுபோல நடந்து முடிந்த 11-ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில், தனது பந்துவீச்சில் நேர்த்தியை மேம்படுத்தியது தொடர்பாக உமேஷ் யாதவ் கூறியதாவது:
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் எனது பந்துவீச்சில் நேர்த்தியை கூட்டியுள்ளேன். இவை அனைத்துக்கும் ஆசிஷ் நெஹ்ரா தான் முக்கிய காரணம். பொதுவாக எனது
பந்துவீச்சு முறையை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிக்கத் தொடங்கினர். எனவே எனது பந்துவீச்சு முறைக்கு ஏற்றவாறு ஆசிஷ் நெஹ்ரா சிறந்த பயிற்சி முறையை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதை அவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைபிடித்து வந்துள்ளார்.

ஒரு ஸ்டம்ப்பை மட்டுமே வைத்து வலைப்பயிற்சி செய்யும் முறைதான் அது. மேலும் பந்தை நேராக வீசும் முறையையும் பழகச் சொன்னார். இதனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசும் போதும் அது உதவிகரமாக அமைந்தது. மேலும் வருங்காலத்தில் நடைபெறவுள்ள தொடர்களை கவனத்தில் கொண்டு எஸ்.ஜி. மற்றும் ட்யூக் ஆகிய பந்துகளைக் கொண்டு பயிற்சி பெற அறிவுறுத்தினார்.

அதுபோல தொடர்ச்சியாக சரியான இடத்திலும், திசையிலும் பந்துவீச கற்றுக்கொண்டேன். இதனால் எனது பந்துவீச்சில் நேர்த்தி அதிகரித்துள்ளது. இதையே ஐபிஎல் தொடரிலும் வெற்றிகரமாக செயல்படுத்தினேன். எனது பந்துவீச்சு மேம்பட்டதற்கு ஆசிஷ் நெஹ்ரா தான் முக்கிய காரணம் என்றார்.