இனவெறி தாக்குதல் பிரச்சினையை எதிர்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியிருந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின்போது இனவெறி தாக்குதல் பிரச்சினையை எதிர்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியிருந்தார்.
இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடினேன். அப்போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் ‘கலு’ என்று அழைப்பார்கள்.
View this post on InstagramA post shared by daren (@darensammy88) on
கருப்பினத்தவர்களை கிண்டல் செய்யும் வார்த்தை அது என்று அறிந்ததும் கோபம் வருகிறது“ என்று தெரிவித்தார்.
ஆனால் டேரன் சமி தன்னை ‘கலு’ என்று கேலி செய்தவர்கள் சகவீரர்களா? அல்லது ரசிகர்களா?, எப்போது நடந்தது என்ற விவரங்கள் எதையும் பதிவு செய்யவில்லை.
அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “என்னைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஐசிசி மற்றும் பிற கிரிக்கெட் வாரியங்கள் பார்க்கவில்லையா? சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் பேசப்போவதில்லையா? இது அமெரிக்கர்களை பற்றியது மட்டுமல்ல. இந்த வன்முறை எல்லா நாட்களிலும் நடக்கிறது. இந்த நேரத்தில் அமைதியாக இருக்கக்கூடாது” என்று பதிவிட்டிருந்தார்.
டேரன் சமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அவருடன் ஐதராபாத் அணியில் ஆடிய முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், பார்தீவ் பட்டேல் பதில் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை அறிந்து இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
பார்தீவ் பட்டேல் கூறும் போது “அந்த (கேவலமான) சொற்களை யாரும் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டதாக நினைக்கவில்லை” என்றார்.
இர்பான் பதான் கூறும்போது “2014-ம் ஆண்டில் டேரன் சமியுடன் இருந்தேன். இனவெறி தாக்குதல் உண்மையிலேயே நடந்து இருந்தால் இந்த விஷயம் நிச்சயமாக விவாதிக்கப்பட்டு இருக்கும். எனவே பெரிய விஷயங்கள் எதுவும் விவாதிக்கப்படாததால் இது போன்ற விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது” என்றார்.
மற்றொரு வீரரான வேணுகோபால் ராவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயிலும் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அதோடு தானும் இனவெறி தாக்குதலுக்கு பலியானதாக கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட்டில் இனவெறி இல்லை என்பது ஒரு கட்டுக்கதை என்றும் கூறியுள்ளார்.