இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை செமி பைனல் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
இந்த போட்டி முழுக்க இந்திய அணியின் பவுலிங் மிகவும் நன்றாக இருந்தது. ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர்குமார், பாண்டியா என்று எல்லோரும் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்திய அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். நியூசிலாந்து அணியின் ரன் ரேட்டை இந்திய பவுலர்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தி வந்தனர்.

இந்திய பவுலர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் அடிக்க வாய்ப்பு கொடுக்கவே இல்லை. முதல் 10 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரிதான் போனது. முதல் பவர் பிளேயில் போடப்பட்ட 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தது.
மழையால், இந்திய அணிக்கு முக்கிய பிரச்சனை ஒன்று காத்து கொண்டுள்ளது. எப்போதும் மான்செஸ்டர் மைதானம் இரண்டாவது பாதியில் பவுலிங்கிற்கு சாதகமான பிட்சாக மாறுவது வழக்கம். அதேபோல் இன்றும் பிட்ச் போக போக ஸ்லோ ஆகும். இதனால் 220 ரன்கள் எடுப்பது கூட மிகவும் கடினம் ஆகும்.
அது மட்டுமன்றி மழையினால் பிட்ச் மேலும் ஸ்லோ ஆகும். இதனால் இந்திய அணியால் பெரிய ஷாட்களை ஆட முடியாது. இது இந்திய அணிக்கு சேசிங்கின் போது பெரிய பிரச்சனை ஆகும். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து இன்று போட்டி மீண்டும் தொடங்கும். இன்றும் மழை குறுக்கிட்டால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படும். போட்டி முடிவுக்கு வர இந்தியா இன்று 20 ஓவர்களையாவது பேட் செய்ய வேண்டும். ஒருவேளை 20 ஓவர்கள் கூட விளையாட முடியாதபடி மழை குறுக்கிட்டால், ஆட்டம் ரத்து செய்யப்படும்.
இந்திய அணி லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை விட அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். போட்டி நடைபெறும் மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபர்டு மைதானத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என வானிலை கணிப்புகள் கூறுகின்றன. இதனால் இன்றைய போட்டியும் முழுமையாக நடைபெறுமா என்பதில் சந்தேகமே!.