ஐபிஎல் கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்பட்ட புஜாரா, இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அனுபவம் குறித்து பேசும் போது நல்ல பந்துகளை ஆடாமல் விடும் கலையைப் பற்றி குறிப்பிடுகிறார்.
யார்க்ஷயர் அணிக்கு புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
யார்க்ஷயரில் கடந்த இரண்டு சீசன்களில் பேட்ஸ்மென்கள் அதிகமான ஷாட்களை ஆடினர், தங்கள் தவறுகளிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்டனர். எனவே இம்முறை கொஞ்சம் நிதானித்து பிறகு ஷாட் ஆட முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஆனாலும் எந்த வீரராக இருந்தாலும் அவரவர் பலத்துக்குத்தான் ஆட வேண்டும். கிரீசில் அதிக நேரம் செலவிட வேண்டும், பந்துகள் ஸ்விங் ஆகும் போது நிறைய பொறுமை அவசியம். கொஞ்சம் தடுப்பாட்ட உத்தியக் கடைபிடிக்க வேண்டும். எப்போது அடித்து ஆட வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். பந்துகள் அதிகமாக ஒன்றும் ஆகாத போது அடித்து ஆடலாம்
சில வேளைகளில் நான் நினைக்கிறேன், நான் பந்துகளை ஆடாமல் விடும்போது ரசிகர்கள் உண்மையில் அதனை விரும்புவதில்லை பாராட்டுவதில்லை. காரணம் குறைந்த ஓவர் கிரிக்கெட்டின் தாக்கமே. ஆனால் இங்கிலாந்து வந்த பிறகு என் பணி என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
இந்திய அணியில் பந்தை ஆடாமல் விடுவதைப் புரிந்து கொள்வார்கள். ரசிகர்கள் பார்வை குறித்து நான் பேசுகிறேன். அவர்கள் பவுண்டரிகளும் சிக்சர்களும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் இங்கு வந்த போது ரசிகர்கள் கிரிக்கெட்டைப் புரிந்து கொள்கிறார்கள். பந்தை ஆடாமல் விட்டால் கூட இங்கு ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
பவுலர் நன்றாக வீசும்போதும், நிலைமைகள் சவாலாக இருக்கும் போதும் முதலில் விக்கெட்டைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இங்கிலாந்து ரசிகர்கள் புரிந்து கொள்கிறார்கள். நன்றாக செட் ஆகிவிட்டால் பிறகு நான் ரன்கள் ஸ்கோர் செய்யத் தொடங்குகிறேன்.
இவ்வாறு கூறினார் புஜாரா.