முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமனம் செய்துள்ளது
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ) தலைவராக முன்னாள் கேப்டனும், இந்தியா ஏ மற்றும் 19 வயது இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது.
இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் விதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தேசிய கிரிக்கெட் அகாடமியை 2000ம் ஆண்டு உருவாக்கியது. தற்போது அந்த அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சி வழங்குவது, ஆலோசனை வழங்குவது, வீரர்களை ஊக்கப்படுத்துவது, ஊழியர்கள் தேர்வு என தேசிய கிரிக்கெட் அகாடமியின் முழு பொறுப்பையும் ராகுல் டிராவிட் ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஜூனியர் மட்டத்திலான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பொறுப்பு டிராவிட் வசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள், என்சிஏ, மண்டல அகாதெமிகளுக்கு புதிய பயிற்சியாளர்களை நியமித்தல், காயமுற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு உரிச சிகிச்சை போன்றவற்றையும் அவர் கண்காணிப்பார்.
இதனால் இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளின் போட்டிகளுக்கு டிராவிட்டால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்போது பராஸ் மாம்பரே, அபய் சர்மா ஆகிய இருவரும் இரு அணிகளையும் தற்காலிகமாக கையாள்வர் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, என்சிஏ-வின் புதிய தலைவராக ராகுல் டிராவிட்டை 2 ஆண்டுக் காலத்துக்கு நியமித்து சிஓஏ குழு உத்தரவிட்டது. ஆனால், முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளதால் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் பதவிக்காலம் வரை இந்தியா சிமெண்ட்ஸ் பணியிலிருந்து ராகுல் டிராவிட்டுக்கு காலவரையற்ற விடுப்பு வழங்கி இந்தியா சிமெண்ட்ஸ் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை நீங்கியது.
இந்தியா ஏ அணி, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கும் டிராவிட் ஆலோசனை வழங்குவார் என்றும், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி பயிற்சியாளர்களுடனும் டிராவிட் இணைந்து பங்களிப்பார் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. தலைமை பயிற்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அவர் பொறுப்பாவார் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.வ்