தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக திராவிட் நியமிக்கப்பட்டதில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த சிஓஏ திராவிடுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஆனாலும் தற்போது இந்த விவகாரம் பிசிசிஐ குறைதீர்ப்பாளர் மற்றும் நீதி அதிகாரி டிகே ஜெயின் முடிவில்தான் இருக்கிறது என்று சிஓஏ குழுவில் புதிதாக இணைந்த லெப்டினண்ட் ஜெனரல் ரவி தோக்டே தெரிவித்தார்.

ராகுல் திராவிட் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வைஸ்-பிரசிடெண்ட் பதவியிலும் இருக்கிறார் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையது ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகவே இவர் எப்படி தேசிய கிரிக்கெட் அகாடெமியின் கிரிக்கெட் தலைமை பதவி வகிக்க முடியும் என்று டிகே ஜெயின் தரப்பில் ராகுல் திராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் ரவி தோக்டே கூறும்போது, “ராகுல் திராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை, இனி டிகே ஜெயின் முடிவெடுக்கட்டும் எங்களைக் கேட்டால் நாங்கள் திராவிடுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம். டிகே ஜெயின் இரட்டைப்பதவி நலன் இருக்கிறது என்றால் நாங்கள் எங்கள் பதிலை அவர்களுக்கு அளிப்போம். அதாவது ஏன் இரட்டைப் பதவி இல்லை என்று பதில் அளிப்போம்” என்றார்.
தேசிய கிரிக்கெட் அகாடெமி பணியில் திராவிட் அமர்த்தப்பட்ட போது இந்தியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பளம் இல்லாத லீவுக்கு திராவிட் இந்தியா சிமெண்ட்ஸிடம் கோரியுள்ளார். ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடெமியை சர்வதேச தரத்துக்கு உயர்த்த திராவிடுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்துள்ளோம், அவரும் தன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று கூறிய தொகாடியா அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்று உறுதியளித்தார்.