தான் வெற்றியாளன் என்பதை விட, தோல்வியடைந்தவன் என்று இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
அறக்கட்டளை ஒன்றின் தடகள வீரர்களுக்கான கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட பங்கேற்றார்.
இதில் ராகுல் டிராவிட் பேசியதாவது:
“தோல்வியைப் பற்றி பேச எனக்குத் தகுதியுள்ளது. நான் 604 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் அதில் 410 போட்டிகளில், 50 ரன்களை தாண்டவில்லை. நாம் தோல்வியடையும்போது நிறைய விஷயங்களை மூடி மறைக்க முயற்சிப்போம். வேறொருவரை குறை கூறுவோம், ஏதோ ஒரு காரணம் தேடுவோம். ஆனால் தோல்வி, நம்மைப் பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாகும்.
வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் சரியாக ஆடாமல் போனால், அந்த சூழ்நிலை சாதகமாக இல்லை அல்லது போதிய பயிற்சி இல்லை என்று பதில் சொல்வது ஒரு வகை. எப்படியும் இந்தியாவில் அடுத்து 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம், இலங்கை போன்ற அணியுடன், அவர்கள் இப்போது இருக்கும் நிலையில் விளையாடினால், எனது சராசரி கூட்ம் என்று திட்டமிடலாம்.
ஆனால் சிறந்த வீரர்கள் தோல்வியை வாய்ப்பாக பார்ப்பார்கள். அதனால் சிறப்பாக தோற்க கற்றுக்கொள்ள வேண்டும்.
2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் மும்பை போட்டியில் மோசமாக தோற்றிருந்தோம். எனது ஆட்டமும் நன்றாக இல்லை. நான் 6-வது வீரராக ஆட வைக்கப்பட்டேன். இரண்டாவது இன்னிங்ஸின் போது நான் ஆடும் நேரம் வந்தது. அப்போது ஸ்டீவ் வாக், ராகுல் 6-வது நிலையிலா? அடுத்த போட்டியில் என்ன 12-வது நிலையிலா? என்று பேசினார்.
ஆனால், ஒவ்வொரு பந்தாக எவ்வளவு சந்திக்க முடியும் என்று பார்க்கிறேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அதுதான் அப்போது என்னால் செய்ய முடிந்த எளிமையான விஷயம். அது கைகொடுத்தது. (டிராவிட் அந்தப் போட்டியில் 180 ரன்களை அடித்தார். அவரும் விவிஎஸ் லக்ஷ்மணனும் இணைந்து 4ஆம் நாள் முழுக்க ஆடியது குறிப்பிடத்தக்கது.)
அதனால் எளிமையான அதே சமயம் முக்கியமான விஷயத்தில் கவனம் வையுங்கள். இதற்கு மீண்டும் மீண்டும் பயிற்சி தேவை. இது ஒரு திறமை. ஆனால் கற்றுக்கொள்ளக் கூடிய திறமை. எப்போதும் இது கை கொடுக்காமல் போகலாம். ஆனால் இந்த படிப்பினையை நான் எப்போதும் மறக்க மாட்டேன்”.
இவ்வாறு டிராவிட் பேசினார்.