லோதா கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்தாமல், நீதிமன்றம் உத்தரவை மீறி செயல்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் பிசிசிஐ செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் நீக்கியது.
இதையடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளுக்காக நிர்வாக குழு ஒன்றை அமைத்த உச்ச நீதிமன்றம் வினோத் ராயை நிர்வாக குழுவின் தலைவராக நியமித்தது.
நிர்வாக குழு உறுப்பினர்களாக ராமசந்திர குஹா, விக்ரம் லிமாய் உள்ளிட்டோரையும் நியமித்தது. இந்த நிலையில், பிசிசிஐ நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக ராமச்சந்திரா குகா தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ள ராமச்சந்திரா குகா, தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் லிமா, முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளாக இருந்தனர்.
ராமச்சந்திரனை விடுவிக்க அவரது மனுவை ஜூலை 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கேட்க உள்ளது.