பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் 2018, 8வது போட்டியில் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கிங்ஸ் லெவன் அணி ராகுல் (47) மற்றும் கேப்டன் அஸ்வின் (33) ஆகியோரது பங்களிப்பினால் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் காலி செய்தார். கேஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி போராடியே வென்றது. கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரியில் 159/6 என்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் புள்ளிகளைப் பெற்றது. ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்.
இந்திய பிட்ச்களின் தன்மைக்கு ஏற்ப முதல் ஓவரே அக்சர் படேல்தான் வீசினார், மறுமுனையில் அஸ்வின் வந்து விட்டார். பிஷன் சிங் பேடி கால நிலைமையை சிந்திக்க வைத்தது இந்த ஸ்பின் தொடக்கம். பிஷன் பேடியாவது பெயருக்கு மதன்லால் 2ஓவர், மொஹீந்தர் அமர்நாத் 2 ஓவர் என்று கொடுப்பார்.
ஆனால் அஸ்வினின் முடிவுக்கு பலன் இருந்தது அதிரடி மன்னன் மெக்கல்லம் 2வது பந்திலேயே அக்சர் படேலின் ஷார்ட் பிட்ச் பந்தை பேகவர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார், 17 வயது ஆப்கன் ஸ்பின்னர் முஜிபுர் கேட்ச் எடுத்தார்.
விராட் கோலியை அதிர்ச்சியடையச் செய்த 17 வயது முஜிபுர் ரஹ்மான்:
மெக்கல்லம் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் விராட் கோலி இறங்கினார், விக்கெட் எடுத்த ஓவரில் சிக்கனமாக வீச முடியாத அக்சர் படேல், விராட் கோலிக்கும், பிறகு டிக்காக்குக்கும் இரண்டு பவுண்டரிகளை வழங்கி முதல் ஓவரில் 10 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
பிறகு அஸ்வினை கீப்பர் பின்னால் ஒரு பவுண்டரி அடித்தார் விராட் கோலி.
3வது ஓவரை ஆப்கான் இளம் லெக் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான் வீசினார். கோலி, டிகாக் இருவருக்கும் வீசினாலும் அந்த ஓவரில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார் முஜீப்.
வேகப்பந்து வீச்சாளர் டை வந்தவுடனேயே மந்தமான இந்தப் பிட்சில் விராட் கோலி அவரை லாங் லெக்கில் புல்ஷாட் பவுண்டரியுடன் வரவேற்றார், பிறகு ஒரு ராஜ கவர் டிரைவ் பவுண்டரி என்று 13 பந்துகளில் அனாயசமாக 21 ரன்கள் வந்தார் விராட் கோலி.
அடுத்த ஓவரில்தான் விராட் கோலிக்கு முஜீபிடமிருந்து அதிர்ச்சி காத்திருந்தது. 5வது பந்து முஜீபின் அருமையான கூக்ளியாக பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கடுமையாகத் திரும்பி கோலியின் மட்டை, கால்காப்பு இடைவெளியில் புகுந்து ஸ்டம்புகளை தொந்தரவு செய்தது. கோலி டிரைவ் ஆட முயன்றார். மிக அருமையான பந்து வீச்சு, கோலி அதிர்ச்சியடைந்தார்.
டிவில்லியர்ஸ் அதிரடி:
கோலி ஆட்டமிழந்தவுடன் டிவில்லியர்ஸ் புகுந்தார். மோஹித் சர்மாவின் ஒரே ஓவரில் 16 ரன்கள் விளாசினார், டிவில்லியர்ஸுகெல்லாம் மோஹித் சர்மா வீச முடியுமா? அதுவும் முதல் பந்தே ஷார்ட் பிட்ச் பின்னால் சென்று மிட்விக்கெட்டில் முறையாக சிக்ஸருக்கு அனுப்பினார். பிறகு பைன் லெக்கை முன்னால் வைத்துக் கொண்டு இடுப்புயர லெக் திசை ஸ்லோ பந்தை வீசினார் மோஹித் சர்மா கிளீனாக அதே திசையில் பவுண்டரி. கடைசி பந்து உண்மையில் ஈ அடிப்பது போன்று கவர் திசையில் பவுண்டரி விளாசினார் டிவில்லியர்ஸ்.
அக்சர் படேல் ஓவரில் குவிண்டன் டிகாக் பிளம்பாக வாங்கினார், நாட் அவுட் என்றார் களநடுவர் அஸ்வின் ரிவியூ செய்தார் பலனில்லை அம்பயர் தீர்ப்பு என்று வந்தது, சூப்பர்ஸ்டார் அணிகள் ஆடும்போது நடுவர்களை கவனிக்க வேண்டுமென்று கூறுவதற்கு இன்னொரு சாட்சியம் இது. அதன் பிறகு டி காக் அஸ்வினை இறங்கி வந்து நேராக ராஜ சிக்ஸ் அடித்தார் பிறகு ஒரு ஸ்வீப் பவுண்டரி. அஸ்வின் 3-0-29-0.
மந்தீப் சிங் 19வது ஓவரின் 4வது பந்தில் 2 வது ரன் ஓட முயற்சித்து துல்லிய த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். இருவரும் அவுட் ஆக கிரீசில் இரண்டு புதிய வீர்ர்கள், கடைசி ஓவர் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போதுதான் மோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் பந்தை வாகாக வீச வாஷிங்டன் சுந்தர் தேர்ட்மேனில் பவுண்டரிக்குத் தூக்கி விட்டார். கடைசியில் பீல்டர்கள் முன்னால் வர கவர் டிரைவ் பவுண்டரியில் வாஷிங்டன் சுந்தர் வெற்றி பெற்றுத் தந்தார். மோஹித் சர்மாவைத் தவிர அனைவரும் அருமையாக வீசினர், மோஹித் 3.3 ஓவர்களில் 45 ரன்கள். ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்