இந்திய அணிக்காக சில பிரமாதமான போட்டிகளை ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தவர் மொகமட் கைஃப், 2002 லார்ட்ஸ் இறுதிப்போட்டியை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியவர் கைஃப்.
இவரும் யுவராஜ் சிங்கும் பிரமாதமான பீல்டர்கள், அதாவது எந்த இடத்தில் நிறுத்தினாலும் சிறந்த முறையில் பீல்ட் செய்பவர்கள்.
ரோஹித் சர்மா இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க தொடங்கியுள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அபாரமான வீரர். அசாத்தியமான சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அசாத்திய அதிகபட்ச ஸ்கோருடன் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதங்களை விளாசியுள்ளார்.
ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் நடப்பதே வேறு என்பதும், அன்றைய தினம் ரோஹித் சர்மாவுக்கானது என்பதும், பெரிய இன்னிங்ஸை ஆடி பெரிய ஸ்கோரை அடிப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

யூடியூப் சேனல் ஸ்போர்ட்ஸ் கிரீன் ஊடகத்துக்கு கைஃப் அளித்த பேட்டியில் அவரிடம் தர்மசங்கடமான ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது, ஆனால் கவலைப்படாமல் தன் மனதில் பட்ட உண்மையை பட்டவர்த்தனமாக உடைத்தார்.
அதாவது குறைந்த ஓவர்கள் ஆடப்படும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர், பார்ப்பதற்கு அழகாக ஆடும் வீரர் என்ற விவாதத்தில் மும்பை ஹிட்மேனை தேர்வு செய்தார் மொகமட் கைஃப்.
“ஒரே நகரில் 2 மேட்ச்கள் நடக்கின்றன, ஒன்றில் விராட் விளையாடுகிறார், இன்னொரு மேட்சில் ரோஹித் சர்மா ஆடுகிறார் என்றால் நான் ரோஹித் சர்மா ஆடும் மேட்சுக்குச் செல்வேன்.
சந்தேகமேயில்லை விராட் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெள்ளப்பந்து போட்டிகளில் அசைக்க முடியாத சாதனைகலை வைத்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில்தான் அந்த நளினம், அழகு உள்ளது. பவுலரை எதிர்கொள்ளும் முன் அவர் நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறார்.
ரோஹித் சர்மா எப்படியென்றால் ஒரு பவுலரை சாத்தி எடுப்பார், ஆனால் அந்த பவுலருக்கு தன்னை அவர் தாக்கி ஆடுகிறார், ஆக்ரோஷமாக ஆடுகிறார் என்பதை உணர முடியாதபடி தாக்குதலாக இருக்கும்.” என்றார் கைஃப்.