கரணம் தப்பினால் மரணம் என்ற பீதியில் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள். ஆம், இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் தொடர் விளையாடுவதற்கு முன்பாக அவர்களின் உடற்தகுதியை உறுதிப்படுத்த “யோ-யா” எனும் டெஸ்ட் வைக்கிறது.
இந்த உடற்தகுதி சோதனையில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, ஒரு வீரரால் இந்திய அணிக்காக தொடரில் விளையாட முடியும். ஏற்கெனவே வைக்கப்பட்ட யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு, முகமது ஷமி ஆகியோர் தகுதி பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இன்று யோ யோ டெஸ்ட்டில் பங்கேற்கவுள்ளார். இதில் ரசிகர்களால் “ஹிட் மேன்” என அன்புடன் அழைக்கப்படும் ரோகித் சர்மா 16.3 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
யோ யோ டெஸ்ட்டில் இந்த மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே ரோகித் சர்மாவால் இந்திய அணிக்காக விளையாட முடியும். இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓடி நல்ல மதிப்பெண்களைப் பெற்ற கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர்.
இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க தகுதிப்பெற்றனர்.ரோகித் சர்மா யோ யோ டெஸ்ட்டில் பெயிலாகும் பட்சத்தில், அவருக்கு பதிலாக ரஹானே அணிக்கு திரும்ப ரெடியாக உள்ளார்.
முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் நடத்தப்பட்ட யோ யோ, டெக்ஸா சோதனையால்தான், ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்ஸன், அம்பதி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறமுடியாமல் போயுள்ள விவரம் வெளியாகியுள்ளது.
இந்திய அணி நிர்வாகத்துக்கும், பிசிசிஐ அமைப்புக்கும் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தால், இங்கிலாந்து செல்லும் இந்திய அணியைத் தேர்வு செய்தபின்தான் வீரர்களுக்கு யோ யோ, டெக்ஸா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் யோ யோ சோதனை என்பது, வீரர்கள் பீல்டிங் செய்யும் மற்றும் வேகமாகக் குனிந்து, வளைந்து செல்ல முடிகிறதா என்பதை அறியும் சோதனையாகும், டெக்ஸா சோதனை என்பது, எலும்பு வலிமையை அறியும் சோதனையாகும்.
இதில் யோ யோ சோதனையில் இந்திய வீரர் ஒருவர் குறைந்தபட்சம் 16.1 மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் அணிக்குத் தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்த மதிப்பெண்களைப் பெறாத காரணத்தால்தான் சாம்ஸன், ஷமி, ராயுடு அணிக்குத் தேர்வாகி, இங்கிலாந்து செல்லும் அணிக்குள் இடம் பெறமுடியவில்லை.
சஞ்சு சாம்ஸனால் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணியில் இடம் பெறமுடியவில்லை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை, அதற்குப் பதிலாக நவ்தீப் சிங் இடம் பெற்றார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ராயுடுவுக்கு இடம் கிடைக்காமல், சுரேஷ் ரெய்னா இடம் பெற்றார்.
இலங்கைக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போதிருந்து இந்த யோ யோ, டெக்ஸா டெஸ்ட் வீரர்களுக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வாகவில்லை என்பதால், அவர்கள் கைவிடப்பட்டனர்.
பொதுவாக யோ யோ, டெக்ஸா சோதனையில் தேர்வாகும் வீரர்கள் நாள்தோறும் உடற்பயிற்சிக் கூடத்தில், உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்பவர்களால்தான் தேர்வாக முடியும். அப்படி இருக்கும் போது வீரர்களுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்காமல் சோதனை நடத்தும் போது எப்படித் தயாராவார்கள் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.