நீர் தேங்கிய இடத்தில் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் உலகில் பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார். அதன்பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தண்ணீர் தேங்கிய இடத்தில் பயிற்சி மேற்கொள்வது போல் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “கிரிக்கெட் மீது உள்ள ஆர்வமும் காதலும் எப்போதும் பயிற்சி செய்ய புதிய முறைகளை கற்று தரும். அத்துடன் நாம் என்ன செய்கிறோமோ அதனை நாம் அனுபவித்து செய்யவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் நீர் தேங்கிய இடத்தில் சச்சின் டெண்டுல்கர் பந்துகளை லாவகமாக அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர் மகிழ்ச்சியாக பயிற்சி செய்யும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
Love and passion for the game always helps you find new ways to practice, and above all to enjoy what you do.#FlashbackFriday pic.twitter.com/7UHH13fe0Q
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2019
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்க மிகவும் கெஞ்சினேன் என ஜாம்பவான் டெண்டுல்கர் 1994ம் ஆண்டு நடந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் சச்சின் சாதனையை யாராலும் மிக எளிதில் மறந்து விட முடியாது. 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசி உள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் விளையாடிய வீரர், அதிக சதம் அடித்த வீரர் என்று இவர் சாதனையை அடுக்கி கொண்டே போகலாம். டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடும் சச்சின், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க வீரர் களமிறங்கி எதிரணியை நடுங்க விடுவார்.

ஆனால் தொடக்க வீரராக களமிறங்க சச்சின் எதிர்கொண்ட சவால்களை தற்போது வெளிப்படுத்தி உள்ளார். 1994-ம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்ததாக கூறினார்.
மேலும் “அந்தப் போட்டியில் நேரடியாக தொடக்க வீரராக களமிறங்க நினைத்தேன். ஆனால் வாய்ப்பிற்காக கெஞ்ச வேண்டியதாக இருந்ததது. இந்த முறை தோற்றுவிட்டால் மீண்டும் ஒரு முறை உங்களிடம் வரமாட்டேன் என்றேன். நான் அந்த போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தேன். இதனால் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று நான் கேட்க வேண்டியதில்லை. அதன்பின் தொடர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடினேன். தோல்வியைக் கண்டு யாரும் பயப்படாதீர்கள்“ என்றார்.
தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் முதல் 5 போட்டிகளில் 82, 63, 40, 63, 70 ரன்கள் எடுத்தார். 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள சச்சின் 18,426 ரன்கள் குவித்துள்ளார்.