டில்லி: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ரிஷாப் பன்ட் சதம் கடந்து கைகொடுக்க, டில்லி அணி, 20 ஓவரில், 187 ரன்கள் குவித்தது.
இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் அணியில் விரிதிமன் சகாவுக்கு பதிலாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இடம் பிடித்தார். ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
சாகிப் அசத்தல்
டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. சாகிப் அல் ஹசன் வீசிய 4வது ஓவரின் கடைசி இரண்டு பந்தில் பிரித்வி (9), ராய் (11) அவுட்டாகினர். அடுத்து வந்த ரிஷாப் பன்ட், சித்தார்த் கவுல் வீசிய 6வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (3), ‘ரன்–அவுட்’ ஆனார்.
பன்ட் விளாசல்
மறுமுனையில் அசத்திய பன்ட், ரஷித் கான் வீசிய 12வது ஓவரில், 3 பவுண்டரி அடித்தார். கவுல், சந்தீப் சர்மா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ஹர்ஷல் படேல் (24), 4வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்திருந்த போது ‘ரன்–அவுட்’ ஆனார். கவுல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய பன்ட், ஐ.பி.எல்., அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். மேக்ஸ்வெல் (9) ஏமாற்றினார்.
தொடர்ந்து அதிரடி காட்டிய பன்ட், புவனேஷ்வர் வீசிய கடைசி ஓவரில், ‘ஹாட்ரிக்’ சிக்சர், 2 பவுண்டரி உட்பட 26 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். டில்லி அணி, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 187 ரன்கள் குவித்தது. ரிஷாப் பன்ட் (128 ரன், 63 பந்து, 7 சிக்சர், 15 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் சாகிப், 2 விக்கெட் வீழ்த்தினார்.
500
டில்லி அணியின் ரிஷாப் பன்ட், இந்த சீசனில் 500 ரன்கள் குவித்த முதல் வீரரானார். இதுவரை, 11 போட்டியில், ஒரு சதம், 3 அரைசதம் உட்பட 521 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து லோகேஷ் ராகுல் (471 ரன், பஞ்சாப்), சூர்யகுமார் யாதவ் (435, மும்பை), அம்பதி ராயுடு (423, சென்னை), வில்லியம்சன் (410, ஐதராபாத்) உள்ளனர்.
1000
அபாரமாக ஆடிய டில்லி அணியின் ரிஷாப் பன்ட், ஐ.பி.எல்., அரங்கில் 1000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை இவர், 35 போட்டியில், ஒரு சதம், 6 அரைசதம் உட்பட, 1085 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் குறைந்த வயதில் (20 ஆண்டு, 218 நாட்கள்) 1000 ரன்கள் எடுத்த வீரரானார். இதற்கு முன், சஞ்சு சாம்சன்,(21 ஆண்டு, 183 நாட்கள்) இந்த இலக்கை எட்டியிருந்தார்.
128
அசத்தலாக ஆடிய டில்லி அணியின் ரிஷாப் பன்ட்(128 ரன்), ஐ.பி.எல்., அரங்கில் முதன்முறையாக சதம் அடித்தார். இது, இந்த சீசனில் பதிவான 3வது சதம். ஏற்கனவே பஞ்சாப் அணியின் கெய்ல் (104* ரன், எதிர்: ஐதராபாத்), சென்னை அணியின் வாட்சன் (106, எதிர்: ராஜஸ்தான்) சதம் அடித்திருந்தனர். இதன்மூலம் இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரரானார்.
* தவிர இது, ஒட்டுமொத்த ஐ.பி.எல்., அரங்கில் பதிவான 50வது சதம். அதிகபட்சமாக கெய்ல், 6 சதமடித்துள்ளார்.
* ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த வயதில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் பன்ட் (20 ஆண்டு, 218 நாட்கள்). முதலிடத்தில் மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாட்கள்) உள்ளார்.