இன்று கடைகளில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம் தொடர்பாக அஸ்வின் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும், சேலம், திருப்பூரில் நாளை (ஏப்ரல் 26) முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தலை மேலும் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உடனடி அறிவிப்பால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால், இன்று (ஏப்ரல் 25) காலை முதலே அனைத்துக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. சில கடைகளில் பொதுமக்கள் வரிசையில் நின்றாலும், பல கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவே இல்லை.
காலை முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் கூடிய கூட்டம்தான் சமூக வலைதளத்தில் பேச்சாக இருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான கூட்டம் கூடியுள்ளது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. இதற்குப் பலரும் தங்களுடைய கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தற்போது வைரஸ் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் வாங்கலாம் அல்லது நம்மோடு வாழும் மக்களுக்குப் பகிரலாம். அச்சுறுத்தலான காலகட்டத்தில் இருக்கிறோம்”.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.
வரும் மே 3 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
The virus is on sale now. We can buy it or just share it with people living with us. ? Scary times ahead. pic.twitter.com/QAii932qF7
— Ashwin ?? (@ashwinravi99) April 25, 2020
இன்று மாலை 3 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் கடைகளின் முன் கூட்டம் கூட்டமாக நின்று மூன்று நாட்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை முதல் முழு ஊரடங்கு செயல்பட இருப்பதால் சென்னை, கோவை, மதுரை மாவட்ட மக்கள் முகக்கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர்.