ரோஹித் சர்மாவின் காட்டி தர்பார், ‘தனிஒருவரின்’ 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்த ஆகச்சிறந்த பேட்டிங்கால் ராஜ்கோட்டில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா என்ற ‘புயல்’ களத்தில் மையம் கொண்டால் எந்த மாதிரியான சேதத்தை எதிரணிக்கு ஏற்படுத்தும் என்பதை நேற்று தனது காட்டடியின் மூலம் வங்கதேச வீரர்களுக்கு உணர்த்திவிட்டார். 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 43 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அவர் ஒருவரே காரணமாகினார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

Photo by Deepak Malik / Sportzpics for BCCI
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம், இந்திய அணி தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்திய அணி கடந்த 2018-ம் ஆண்டில் 14 டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியும், 7 போட்டிகளில் வெற்றியும் பெற்றிருந்தது.
ஆனால், இந்த ஆண்டில் இந்த ஆட்டத்தோடு 16 டி20 போட்டிகளில் விளையாடி 13-வது வெற்றியைப் பெற்றது. இதில் பெரும்பாலும் சேஸிங் செய்தே அதிகமான வெற்றிகளை இந்திய அணி ருசித்ததுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றிக்கு உரித்தானவர் ரோஹித் சர்மா மட்டுமே. தனது 100-வது டி20 போட்டியில் பங்கேற்ற ரோஹித் சர்மாவுக்கு இந்த ஆட்டம் மறக்க முடியாத வெற்றியாக அமைந்தது. மிகக்குறைந்த பந்துகளில் 50-க்கும் மேற்பட்ட அதிக ரன்களை மூன்றாவது முறையாக ரோஹித் சர்மா சேர்த்துள்ளார். ேமலும் டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் அடித்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவை தோற்கடித்து 2-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறினார்.
ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3 சதங்கள் அடித்து அசுரத்தனமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரோஹி்த் சர்மாவுக்கு டி20 போட்டியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை வங்கதேச வீரர்கள் வாய்பிளந்து பார்த்தனர்.