இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான ராகுல் டிராவிட்டின் பிறந்தநாளை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
1973ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி பிறந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 1996ம் ஆண்டு அறிமுகமாக ராகுல் டிராவிட், தனது சுயநலம் இல்லாத சிறப்பான ஆட்டத்தின் மூலம் அப்போதைய கிரிக்கெட் உலகின் எதிரணிகளுக்கு தொல்லை கொடுத்தவர், களத்தில் இறங்கிவிட்டால் எதிரணியின் அசுர வேக பந்துவீச்சுகளையும் அசராமல் பதம் பார்க்கும் காரணத்தினால் இவர் இந்திய கிரிக்கெட் அணியின் “சுவர்” என்று அழைக்கப்படுகிறார்.
தான் அறிமுகமான 10 ஆண்டுகளில் தான் யார் தனது திறமை என்பதை உலகிற்கு காட்டிய ராகுல் டிராவிட், இந்திய அணியின் கேப்டனாக 2005ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 10,000 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ள டிராவிட், டெஸ்ட் அரங்கில் அதிகபட்சமாக 210 கேட்சுகள் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றப்பின் 19வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வெற்றி பாதையில் தொடர்ந்து வழிநடத்தி வரும் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட இளம் வீரர்களையும் இந்திய அணிக்கு உருவாக்கிகொடுத்துள்ளார்.
பேசும் போது சத்தமாக பேசாமல், தன்னடக்கத்தின் மறு உருவமாக திகழும் ராகுல் டிராவிட் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இவரின் பிறந்தநாளையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்பட உலகின் பல்வேறு அணி வீரர்களும் டிராவிட்டிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து, அவருடனான தங்களது அனுபவத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது முன்னாள் ஹீரோவின் பிறந்தநாளை சமூக வலைதளங்களான முகநூல் மற்றும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.