ஒருநாள் போட்டிகளில் எனக்கும், ஷமிக்கும் அதிகம் பொறுப்புள்ளது: உமேஷ் யாதவ்

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை எனக்கும், ஷமிக்கும் பொறுப்புணர்வு அதிகம் உள்ளது என வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் முதல் 3 ஆட்டங்களில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக செயல்பட்டனர். தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில், 4-வது ஒருநாள் போட்டியில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு பதில் மொகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பெங்களூருவில் நடந்த 4-வது போட்டியில் உமேஷ் யாதவ் 10 ஓவர்களில் 71 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது போட்டி நாளை நாக்பூரில் நடைபெறுகிறது.

இதுகுறித்து வேகப்ப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அணி கடந்த சில போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளது. நான் கடந்த போட்டியில் 15 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக கொடுத்து விட்டேன் என நினைக்கிறேன். நீண்ட நாள்களுக்கு பிறகு நானும் ஷமியும் களமிறங்கி உள்ளோம். அணியினர் எங்களிடம் எதிர்பார்ப்பதை மூத்த வீரர்களான நாங்கள் நிறைவேற்ற வேண்டும். போட்டியின் இறுதி ஓவர்களில் நாங்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பந்துவீச வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்.

ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதையே விரும்புகிறேன். ஆனால், எந்த வகையான போட்டியிலும் விளையாடுவதற்கான தகுதி இருந்தால் மட்டுமே அணி நிர்வாகத்தினர் வாய்ப்பு வழங்குவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.