தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் அம்லா(23) மற்றும் டி காக்(23) ஆகியோர் மட்டும் சற்று நேரம் நிலைத்து ஆடி அவுட் ஆனார்கள்.

இவர்கள் தவிர ஜெபி டுமினி 25 மற்றும் காயா சோண்டோ 25 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 32.2 ஓவர்களில் 118 ரன்கள் மட்டும் எடுத்த தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 119 என்ற எளிமையான இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 15 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் கைகோர்த்த கோலி-தவான் கூட்டணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு தூக்கிச்சென்றனர். தவான் அரைசதம் அடித்தார். கோலி 46 ரன்களை குவித்தார். வேகமாக ரன்களை குவித்த இருவரும் ஆட்டத்தை 20.3 ஓவர்களிலேயே நிறைவு செய்தனர். இதனால் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.