இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, சானியா மிர்சா, சாய்னா நேவால், மேரி கோம், தன்ராஜ் பிள்ளை, லியாண்டர் பயஸ், கர்ணம் மல்லேஸ்வரி, அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு கேல் ரத்னா வழங்கப்பட்டுள்ளது.
கேப்டன் விராட் கோலிக்கு 2013ம் ஆண்டு அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு விராட் கோலிக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது. 
விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது.
இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், பளுதூக்கும் வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதன் பின்னர், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தங்களது விருதுகளை பெற்று வருகின்றனர்.
இந்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரியார், அர்ச்சுனா, தயன் சந்த் மற்றும் ராஷ்டிரிய கே ப்ரோட்சாஹன் புரஸ்கர் ஆகிய 5 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் எனப் பொருள்படும். கேல் ரத்னாவில் ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பண முடிப்பு ரூ7.5 லட்சம் வழங்கப்படும். 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் இந்த ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது. உலகச் சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றதால், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.