உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, விராட் கோலி 3-வது ஓவரிலேயே களமிறங்கினார்.
ரோஹித் சர்மாவுடன் இணைந்து தொடக்கத்தில் சற்று திணறினாலும், அதன்பிறகு அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மற்றொரு அரைசதத்தை பதிவு செய்தார்.

இந்த அரைசதத்தை எட்டியதன் மூலம், உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக, உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோரது சாதனையை கோலி சமன் செய்திருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு அரைசதம் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். இது சச்சினாலும் செய்ய முடியாத ஒரு சாதனையாகும்.
இந்த ஆட்டத்துக்கு முன், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிராக முறையே 82, 77, 67, 72 ரன்கள் எடுத்திருந்தார்.
இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலக கோப்பை 2019ம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடரில் இதுவே இந்திய அணியின் முதல் தோல்வி ஆகும். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இங்கிலாந்து உடனான போட்டியில், டாஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. மேலும் முக்கியமாக பவுண்டரியின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. உலக கோப்பையில் மிகவும் குறைந்த அளவான 59 மீட்டர் தூரம் மட்டுமே பவுண்டரி இருந்தது.
இதுபோன்ற சூழலை இந்திய அணி எதிர்கொள்வது இதுவே முதன்முறையாகும். இந்த சிறிய பவுண்டரியில் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்வீப் போன்ற ஷாட்களால் சிக்சர் அடித்தால், ஸ்பின்னர்களால் என்னதான் செய்ய முடியும்?. இதுதான் தோல்விக்கான மிக முக்கிய காரணம்.
மேலும் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறந்து விளையாடினார்கள் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்களது திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக போராடினார்கள்.
ஒவ்வொரு டீமும், ஒரு கட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கிரிக்கெட் வீரர்களான நாங்கள், இவற்றை கடந்துதான் ஆக வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த போட்டி குறித்து அணி வீரர்களுடன் கலந்து பேசி அடுத்த போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என நிச்சயம் ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.