விராட் கோலி, சூர்யகுமார் யாதவ்; யார் டி20ல் பெஸ்ட்? – ஜாகீர் கான், சேவாக் கருத்து!

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதற்கு ஜாகிர் கான் மற்றும் சேவாக் பதிலளித்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் தொடர்ச்சியாக சொதப்பி வந்தவர் துவக்க வீரர்கள். தொடர் முழுவதும் நம்பிக்கை கொடுத்து வந்தவர்கள் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ்.

விராட் கோலி 6 போட்டுகளில் 296 ரன்கள் அடித்து உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவராக இருக்கிறார். நான்காவது இடத்தில் களமிறங்கி தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தி வந்த சூரியகுமார் யாதவ் 6 போட்டிகளில் 239 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 200 ஆகும்.

இதில் விராட் கோலி 4 அரைசதங்களும், சூரியகுமார் யாதவ் 3 அரைசதமும் அடித்திருக்கின்றனர். இதனால் எழுந்துள்ள, டி20 உலக கோப்பை தொடரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தனர்? என்ற விவாதத்திற்கு சேவாக், ஜாஹிர் கான் இருவரும்  பதில் அளித்துள்ளனர்.

“விராட் கோலி தான் பெஸ்ட். அவரது புள்ளிவிவரங்களே அதை கூறுகின்றன. அவரது அனைத்து அரைசதங்களும் தேவையில்லாத போட்டிகளில் வரவில்லை. மிகச்சரியான நேரத்தில் வந்தது. அதிலும் மூன்று போட்டிகள் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை நின்று இருக்கிறார். ஆகையால் அவர்தான் பெஸ்ட்.” என்றார் ஜாகீர் கான்.

இந்த விவாதத்திற்கு கருத்து தெரிவித்த வீரேந்திர சேவாக் கூறுகையில், “நானும் விராட் கோலியை தான் இந்த உலக கோப்பையின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக கூறுவேன். பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொண்டு வெற்றியை பெற்று தந்ததில் இருந்து அரையிறுதி போட்டி வரை அவரை சுற்றியே இந்திய அணியின் பேட்டிங் இருந்திருக்கிறது. பாகிஸ்தானிடம் பெற்று தந்த வெற்றி, இந்தியாவிற்கு அரையறுதி போட்டி வரை செல்ல உதவி இருக்கிறது. சந்தேகத்திற்கு இடம் இன்றி நான் விராட் கோலியை கூறுவேன்.

சூர்யா குமார் யாதவ் அதிரடியாக விளையாடுகிறார். மைதானத்தின் அனைத்து புறங்களிலும் அடிக்கிறார். நல்ல பார்மில் இருக்கும் வரை அவரது ஷார்ட்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் வரும். அவரது பார்ம் தவறும் பொழுது, நேர்த்தியான கிரிக்கெட் விளையாடுபவர்களை விட இவர் எளிதில் ஆட்டம் இழந்து விடுவார்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.